×

வயநாட்டில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள்-போலீஸ் இடையே துப்பாக்கி சண்டை: பெண் உள்பட 2 பேர் கைது: 2 பேர் தப்பி ஓட்டம்

திருவனந்தபுரம்: வயநாட்டில் நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் குண்டு காயத்துடன் 2 பெண் மாவோயிஸ்ட்டுகள் காட்டுக்குள் தப்பி ஓடினர். பெண் உள்பட 2 பேர் பிடிபட்டனர்.கேரள மாநிலம் வயநாடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த தம்பி என்பவர் போலீசிடம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் வயநாடு பேரியா என்ற பகுதியில் உள்ள சப்பாரம் காலனிக்கு நேற்று முன்தினம் இரவு மாவோயிஸ்ட்டுகள் வரத் திட்டமிட்டது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் அந்த பகுதியில் முகாமிட்டு ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அனீஷ் என்பவரின் வீட்டுக்கு 4 மாவோயிஸ்ட்டுகள் வந்து இருப்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட வீட்டை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர். சிறிது நேரம் கழித்து அனீஷின் வீட்டில் இருந்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வெளியே வந்தார். அப்போது தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் அங்கு நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கூச்சலிட்டார்.

இதையடுத்து வீட்டுக்குள் இருந்த மாவோயிஸ்ட்டுகள் தப்பி ஓட முயன்றனர். அப்போது அனைவரையும் சரணடையும்படி கூறி அதிரடிப்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு மாவோயிஸ்ட்டுகளும் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதற்கிடையே 2 பெண் மாவோயிஸ்ட்டுகள் வீட்டின் பின்புறம் வழியாக தப்பி ஓடினர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டுக்குள் நுழைந்த அதிரடிப்படையினர் அங்கு ஒரு அறையில் பதுங்கி இருந்த சந்துரு, தமிழ் நாட்டை சேர்ந்த சுந்தரி என்கிற உண்ணி மாயா என்ற 2 மாவோயிஸ்ட்டுகளை மடக்கிப் பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து 2 ஏகே 47 உள்பட 3 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. அவர்களது துப்பாக்கிகள் பழுதானதால் தான் போலீசிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. உடனே 2 பேரையும் அதிரடிப்படையினர் வயநாடு மாவட்டம் கல்பெட்டாவுக்கு விசாரணைக்காக கொண்டு சென்றனர். இதற்கிடையே தப்பி ஓடிய 2 பெண் மாவோயிஸ்ட்டுகளை தேடும் பணியில் அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் காயம் காரணமாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம் என்பதால் வயநாடு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

* சார்ஜ் போட வந்தனர்

இந்த சம்பவம் குறித்து மாவோயிஸ்ட்டுகள் தங்கி இருந்த வீட்டைச் சேர்ந்த அனீஷ் கூறியது: என்னுடைய வீட்டுக்கு 3 பெண்கள் உள்பட 4 மாவோயிஸ்ட்டுகள் உணவு சாப்பிடுவதற்காகவும், அவர்களிடம் உள்ள செல்போன், லேப்டாப் உள்பட மின்னணு சாதனங்களுக்கு சார்ஜ் செய்வதற்காகவும் வந்தனர். இது குறித்து அறிந்த அதிரடிப்படையினர் எங்களது வீட்டை முற்றுகையிட்டு துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதில் 2 பேர் பிடிபட்டனர். மேலும் 2 பேர் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே அனீஷ், அவரது குடும்பத்தினரை போலீசார் வேறு இடத்திற்கு மாற்றி விட்டனர். தொடர்ந்து சம்பவம் நடந்த வீட்டுக்கு போலீசார் சீல் வைத்து உள்ளனர்.

The post வயநாட்டில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள்-போலீஸ் இடையே துப்பாக்கி சண்டை: பெண் உள்பட 2 பேர் கைது: 2 பேர் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Maoists ,Wayanad ,Thiruvananthapuram ,
× RELATED வயநாட்டில் மாவோயிஸ்ட்- போலீசார் துப்பாக்கி சண்டை