×

மார்த்தாண்டம் மேம்பாலம் அருகே பைக் திருடிய ஆசாமியை சுற்றிவளைத்து தர்ம அடி: இரவில் காத்திருந்து பிடித்த இளைஞர்கள்

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் இருந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பகுதியையொட்டி வெட்டுவெந்நி பகுதி வரை 2.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைந்துள்ளது. காலையில் வேலைக்கு செல்பவர்கள் மார்த்தாண்டம் பாலத்தின் அடிப்பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு வேலை முடிந்ததும் மாலையிலோ, இரவிலோ மீண்டும் வந்து பைக்கை எடுத்து செல்வார்கள்.

ஆனால் சமீபகாலமாக இவ்வாறு செல்பவர்களை நோட்டமிடும் ஆசாமிகள், நைசாக பைக்கை திருடும் சம்பவம் அரங்கேறி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு காப்பிக்காடு பகுதியை சேர்ந்த அருள் என்பவர் மேம்பாலம் அடிப்பகுதியில் தனது பைக்கை நிறுத்திவிட்டு ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி ஆலைக்கு வேலைக்கு சென்றார். இரவில் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் அருளின் நண்பர்கள் சிலர், எப்படியாவது பைக்கை திருடியவரை கண்டுபிடிக்கவேண்டும் என தினமும் இரவில் மார்த்தாண்டம் மேம்பால பகுதியில் நோட்டமிட்டனர்.
இதன் பலனாக நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மர்ம நபர் ஒருவர் பைக் ஒன்றை தள்ளிக்கொண்டு சென்றதை கண்டனர். அருகே சென்ற அருளின் நண்பர்கள், எதற்காக பைக்கில் செல்லாமல் தள்ளிக்கொண்டு செல்கிறீர்கள் என கேட்டனர்.

ஆனால் அதற்கு அந்த ஆசாமி மழுப்பலாக பதிலளித்தார். எனவே இந்த நபர்தான் அருளின் பைக்கை திருடியிருப்பார் என நினைத்த நண்பர்கள் பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார், பொதுமக்கள் பிடியில் இருந்த நபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அந்த நபர் கழுவன்திட்டை பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர் மீது ஏற்கனவே திருட்டு சம்பந்தமான 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

அதில் ஒரு வழக்கில் அவரை போலீசார் தேடி வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் அந்த ஆசாமி தள்ளிக்கொண்டு சென்றது திருட்டு பைக் என்பதும், அது யாருடையது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அருளின் பைக்கையும் அதே நபர்தான் திருடினாரா? என்பது தொடர்பாகவும் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர்.

The post மார்த்தாண்டம் மேம்பாலம் அருகே பைக் திருடிய ஆசாமியை சுற்றிவளைத்து தர்ம அடி: இரவில் காத்திருந்து பிடித்த இளைஞர்கள் appeared first on Dinakaran.

Tags : Dharma Adi ,Marthandam ,Marthandam Bhammam ,Kulittura Tamiraparani river ,Ketvenni ,Dinakaran ,
× RELATED சென்னை புளியந்தோப்பில் இந்து முன்னணி...