×

திண்டுக்கல்லில் அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், நவ. 8: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.வெள்ளோடு கிராமம் சிறுநாயக்கன்பட்டி மாதா கெபி கிறிஸ்தவ மக்கள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிறிஸ்தவ மக்கள் முன்னணி நிறுவன தலைவர் மரிய ஆரோக்கியம் தலைமை வகித்தார். பின்னர் கலெக்டர் பூங்கொடியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ‘ஏ.வெள்ளோடு கிராமம் சிறுநாயக்கன்பட்டி மாதா கெபி அருகில் முறையான கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததால் மழைநீருடன் சாக்கடை கழிவுகள் கலந்து தெருக்களில் தேங்கி நிற்கிறது.

இதனால் பொதுமக்கள் சுகாதார கேட்டிற்குள்ளாகின்றனர். குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் சரும நோயால் பாதிக்கப்படுகின்றனர். மதுரை ரோட்டில் உள்ள தனியார் பால் பண்ணையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் அருகிலுள்ள கல்லறையில் குழி தோண்டும் போது தண்ணீர் ஊற்றெடுக்கிறது. இதனால் சடலங்களை புதைக்க முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் மங்கம்மாள் நீர்தேக்கத்தின் வழியாக கழிவுநீர் செல்வதால், நிலத்தடி நீர் மாசுபடும் சூழல் உள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.

The post திண்டுக்கல்லில் அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dindigul Collector's Office ,A. Vellodu Village ,Sirunayakanpatti ,Matha ,Kepi ,Christian ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...