×

அமலாக்கத்துறையை என் வீட்டுக்கு அனுப்பினால் கஞ்சி போட்ட காட்டன் சேலைதான் கிடைக்கும்: அண்ணாமலைக்கு காங். எம்பி ஜோதிதிமணி காட்டமான பதிலடி

கரூர்: அமலாக்கத்துறையை என் வீட்டுக்கு அனுப்பினால் கஞ்சிபோட்ட காட்டன் சேலைதான் கிடைக்கும் என்று அண்ணாமலைக்கு கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார். கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கரூரில் நேற்று அளித்த பேட்டி: பாஜ தலைவர் அண்ணாமலை, என்னை பெண் என்பதால் பிழைச்சு போ என விட்டு இருப்பதாக கூறியுள்ளார். இதை சொல்வதற்கு அண்ணாமலை யார். மக்களை கொள்ளையடித்து, தமிழ்நாட்டில் ஒரு வசூல் ராஜாவாகி, அதிகாரத்தில் இருக்கும் ஆணவத்தில்தான் அண்ணாமலையை இப்படி பேச வைக்குது.

அண்ணாமலையால் என்னை என்ன பண்ண முடியும். அதிகபட்சம், அண்ணாமலையின் கையிலும், பாஜவின் கையிலும் இருப்பது அமலாக்கத்துறைதான். அதைத்தான் எதிர்க்கட்சிகள் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஏவிக் கொண்டிருக்கிறார்கள். முடிந்தால், அமலாக்கத்துறையை என் வீட்டுக்கு அனுப்பட்டும், அங்கு கஞ்சி போட்ட காட்டன் சேலையை தவிர வேறு எதுவும் கிடைக்காது. அண்ணாமலையை போல மணல் மாபியாக்களிடம் மாதம் ரூ.60 லட்சம் வாங்கிக்கொண்டு, ஒரு ஆடம்பர வாழ்க்கை. ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் வீட்டுக்கு வாடகை எனக்கூறுகிறார்கள். அதற்கு இன்று வரை பதில் சொல்லவில்லை. சிலர் வேணா இந்த மிரட்டல்களுக்கு பயப்படலாம்.

நான் அதற்கு ஆள் கிடையாது. அவரை போல நேற்று பெய்த மழையில் இன்னைக்கு முளைத்த காளான் கிடையாது. பதில் சொல்ல திராணியில்லாமல், என்னை நேர்மையற்றவர் வசூல்ராஜா எனக் கூறுவது அனைத்தும் அண்ணாமலைக்கே பொருந்தும். இன்று, பெருமையுடன் கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது எனக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பெருமை. கறைபடிந்த ஒரு ஊழல் மிகுந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரி, தன்னை நேர்மையானவர் எனச்சொல்லிக் கொள்வது, காவல்துறையில் நேர்மையாக உள்ளவர்களை அசிங்கப்படுத்துவதாக உள்ளது. அண்ணாமலை ஒரு கவுன்சிலர் கிடையாது, சட்டமன்ற உறுப்பினர் கிடையாது, ஒரு எம்பி கிடையாது.

அவருக்கு இசட் கேட்டகிரி உட்பட முக்கிய பாதுகாப்பு தரப்படுகிறது. யாரோட வரிப்பணத்தில் தரப்படுகிறது. மக்களின் வரிப்பணத்தை ஒரு மாதத்திற்கு இரண்டரை லட்சம் வரை சாப்பிட்டுக் கொண்டுள்ளார். பாஜவின் அடிவருடியாக இருந்து பதவியை பெற்றவர் அண்ணாமலை, என் வரலாறு அப்படியில்லை, ஒரு வாக்குச்சாவடி முகவராக இருந்து வளர்ந்து இப்போது எம்பியாக உள்ளேன். நிச்சயம் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும். அப்போது, அண்ணாமலை செய்த ஊழல்கள் அனைத்தையும் அம்பலப்படுத்துவோம். அன்று, அண்ணாமலை இருக்கும் இடம் வேறாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அமலாக்கத்துறையை என் வீட்டுக்கு அனுப்பினால் கஞ்சி போட்ட காட்டன் சேலைதான் கிடைக்கும்: அண்ணாமலைக்கு காங். எம்பி ஜோதிதிமணி காட்டமான பதிலடி appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Jyotithimani ,Karur ,Congress ,Jyotimani ,Jyothimani ,Dinakaran ,
× RELATED ஓட்டுக்கு பணம் கொடுத்தேனா: அண்ணாமலை பரபரப்பு பேட்டி