×

பத்திரிகையாளருக்கு எதிராக மான நஷ்ட வழக்கு எடப்பாடியிடம் வாக்குமூலம் பெற வழக்கறிஞர் ஆணையர் நியமனம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ம் ஆண்டு தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள தனக்குள்ள பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக, உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வரும்போது மற்ற வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்கவே வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமித்து, சாட்சியத்தை பதிவுசெய்ய வேண்டும். மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை. அனைத்து சட்ட நடைமுறையையும் பின்பற்ற தயாராக உள்ளேன். வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமென்ற இந்த மனுவை ஏற்காவிட்டால், தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி வாதிட்டார். அப்போது மேத்யூ சாமுவேல் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ‘‘தமக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்த நிலையில், சாட்சியப்பதிவை தள்ளிவைக்கக் கோரி 21 முறை அவகாசம் கோரியுள்ளார். இந்த நிலையில், தற்போது நீதிமன்றத்திற்கு வர மறுப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல’’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து உத்தரவிட்டார். அவர் ஒரு மாதத்திற்குள் சாட்சிகளை பதிவு செய்து முடிக்க வேண்டும். அதனை அறிக்கையாக டிசம்பர் 15ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்

The post பத்திரிகையாளருக்கு எதிராக மான நஷ்ட வழக்கு எடப்பாடியிடம் வாக்குமூலம் பெற வழக்கறிஞர் ஆணையர் நியமனம்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Chennai ,Delhi ,Mathew Samuel ,Koda Nadu ,
× RELATED மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி...