×

திருவிடந்தை இசிஆர் சாலையில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் இயங்காததால் அடிக்கடி விபத்து: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை இசிஆர் சாலையில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் இயங்காததால், அதிகளவு வாகன விபத்துகள் நடந்து வருகிறது. இதனால், தானியங்கி சிக்னலை சீரமைக்க வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் இசிஆர் சாலையில் தினமும் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், கனரக லாரிகள், வேன், கார் மற்றும் பைக் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் லட்சக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனால், எப்போதுமே இச்சாலை போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்படுவது வழக்கம்.

இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை இசிஆரில் இருந்து நித்யகல்யாண பெருமாள் கோயிலுக்கு திரும்பும் இடத்தில் பல மாதங்களுக்கு முன்பு தனியாங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டன. அந்த, சிக்னல்கள் கடந்த சில வாரங்களாக இயங்காமல் காட்சிப் பொருளாக உள்ளது. இங்கு, இரவு நேரங்களில் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. அப்படி, ரோந்து பணி சென்றாலும் ஏதோ பெயரளவுக்கு சுற்றிப் பார்த்து விட்டு வந்து விடுகின்றனர். இதனால், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயிலுக்கு அருகே இசிஆர் சாலையில், சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களும், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இதில், பலர் படுகாயம் அடைந்தும், சிலர் உயிரிழந்தும் விடுகின்றனர்.

மேலும், அந்த பகுதிக்கு புதிதாக வரும் பலர் நித்யகல்யாண பெருமாள் கோயிலுக்கு செல்வதற்கு எந்த பக்கம் திரும்பி செல்ல வேண்டும் என தெரியாமல் குழம்புகின்றனர். மேலும், சிக்னல்கள் இயங்காததால் அங்கு பகல் நேரத்தில் பணியில் இருக்கும் போலீசார், கை சைகை மூலம் போக்குவரத்தை சரி செய்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயிலுக்கு திரும்பும் இடத்தில் இயங்காத தானியங்கி போக்குவரத்து சிக்னல்களை பெரிய விபத்துகள் மற்றும் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்பு போர்க்கால அடிப்படையில் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவிடந்தை இசிஆர் சாலையில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் இயங்காததால் அடிக்கடி விபத்து: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvidanthai ,Mamallapuram ,Thiruvidanthai ECR road ,
× RELATED செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே...