×

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மீண்டும் விண்ணப்பம் செய்த 11.85 லட்சம் பேருக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் பணி துவக்கம்

* ரூ.1000 வழங்கும் 2ம் கட்ட திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்கிறார்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், மீண்டும் விண்ணப்பம் செய்த 11.85 லட்சம் பேருக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. இதில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ரூ.1000 வழங்கும் திட்டத்தை விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி, கடந்த செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி இந்த திட்டம் தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் 1.63 கோடி பேர் விண்ணப்பித்தனர். அதில், களஆய்வு செய்யப்பட்டு 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தகுதியானவர்கள் என தமிழக அரசு தேர்வு செய்தது. இவர்களுக்கு கடந்த இரண்டு மாதமாக தலா ரூ.1000 அவர்களது வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சுமார் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக விண்ணப்பித்து, அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால், நியாயமான காரணம் இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை ஏற்று, தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25ம் தேதி வரை சுமார் 11.85 லட்சம் பேர் ரூ.1000 கேட்டு மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களை தமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரிகள் களஆய்வு செய்தனர். தொலைபேசி மூலமாகவும், நேரிலும் சென்று ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, இவர்களில் தகுதியானவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டாலும், அதற்கான காரணம் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். சொந்த வீடு, கார், ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்கள், குடும்பத்தில் யாராவது ஒருவர் வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக விண்ணப்பித்தவர்கள் எவ்வளவு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

அதே நேரம், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு இந்த மாதம் (நவம்பர்) தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வருகிற 10ம் தேதி (வெள்ளி) தலா ரூ.1000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

The post கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மீண்டும் விண்ணப்பம் செய்த 11.85 லட்சம் பேருக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,
× RELATED வீண் விளம்பரம் தேடுவதிலேயே...