×

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு எடையை தாண்டியது; காசா மீது இதுவரை 25,000 டன் வெடிகுண்டு வீச்சு: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மலேசிய பிரதமர்

காசா: ஹிரோஷிமா மீது அணுகுண்டு போட்ட போது ஏற்பட்ட சேதத்தை காட்டிலும், காசா மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியதால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினரின் நிலைகளை தொடர்ந்து அழித்து வருகிறது. தொடர் தாக்குதல்களால் ஏராளமான பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மலேசிய பிரதமர் கூறுகையில், ‘இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா மீது அணுகுண்டு போட்ட போது ஏற்பட்ட சேதத்தை காட்டிலும், காசா மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியதால் அதிகம் ஏற்பட்டுள்ளது’ என்று கூறினர்.

உண்மையில் அவர்கள் கூறிய கருத்து உண்மையானது தானா? என்பது குறித்து, யூரோ-மத்திய தரைக்கடல் தளம் வெளியிட்ட பதிவில், ‘காசா மீது இஸ்ரேல் ராணுவத்தால் வீசப்பட்ட குண்டுகளின் சக்தியானது, ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் சக்தியை காட்டிலும் 1.5 மடங்கு அதிகம். ஹிரோஷிமா நகரத்தின் பரப்பளவு 900 சதுர கிலோமீட்டர்; காசாவின் பரப்பளவு 360 சதுர கிலோமீட்டர் மட்டுமே உள்ளது. கடந்த 4 வாரங்களில் மட்டும் காசா மீது 25,000 டன்களுக்கும் அதிகமான வெடிபொருட்களை இஸ்ரேல் வீசியுள்ளது. இந்த அளவீடானது இரண்டு ஹிரோஷிமா வெடிகுண்டுகளுக்கு சமமானதாகும்.

காசா நகரம் முழுவதும் சேதமடைந்துள்ளன. காசாவில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவர்களில் 4053 குழந்தைகள் மற்றும் 2570 பெண்களும் அடங்கும். கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். 2219 பேரை இன்னும் மீட்கவில்லை. அவர்கள் மண்ணுக்குள் புதைந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த குண்டுவெடிப்பால் 84,100 குடியிருப்பு வீடுகள் அழிக்கப்பட்டன. பள்ளிகள், மருத்துவமனைகள், தொழில்துறை கூடங்களும் அழிக்கப்பட்டன’ என்று தெரிவித்துள்ளது. மலேசிய பிரதமரின் கூற்றை உறுதிபடுத்தும் வகையில் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. காசா நகரில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரே தெரிவித்துள்ளார்.

ஜெனீவா உடன்படிக்கையின்படி, வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், மக்களின் குடியிருப்பு கட்டிடங்கள் மீதான தாக்குதல்கள் நடத்த தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், காசாவில் மேற்கண்ட பகுதிகளில் தான் அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளன. இதற்கு காரணம் ஹமாஸ் தீவிரவாதிகள் இந்தக் கட்டிடங்களில் அல்லது அதற்கு அருகில் இருக்கும் இடத்தில் தான் தங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. காசாவில் மட்டும் 85 அரசு கட்டிடங்களையும், 47 மசூதிகளையும், மூன்று தேவாலயங்களும் தரைமட்டமானதாக கூறப்படுகிறது. இந்த போரினால் 35 ஊடகவியலாளர்கள், 124 சுகாதாரப் பணியாளர்கள், 18 அவசரகால மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் பலியாகி உள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

பிடனுடன் நெதன்யாகு பேச்சு: இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பேசினார். அப்போது ​​காசா மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துதல் மற்றும் பிணையக்கைதிகளை விடுவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், ‘போரை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதுதொடர்பாக வரும் நாட்களில் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒப்புக்கொண்டனர். காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை அளிப்பது குறித்தும், ஹமாஸ் பிடியில் இருக்கும் பிணையக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது’ என்று கூறினார்.

போர் நிறுத்தம் இருக்காது: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ஹமாசுக்கு எதிரான போர் முடிந்த பின்னர், காசாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு பொறுப்பையும் இஸ்ரேல் ஏற்கும். ஹமாஸ் வழியை பின்பற்றாதவர்கள் மூலம் காசாவின் நிர்வாகம் இருக்கும். எங்களது அனைத்து பிணையக்கைதிகளையும் விடுவிக்கும் வரை ஹமாசுக்கு எதிரான போர் நீடிக்கும். குறுகிய கால போர் நிறுத்தத்தை ஏற்க தயாராக உள்ளோம். அவை மனிதாபிமான நடவடிக்கைக்காக செயல்படுத்தப்படும். ஆனால் பொதுவான போர் நிறுத்தம் இருக்காது. ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள், இந்த போரில் தலையிட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன். ஒருவேளை அவர்கள் போரில் நுழைந்தால், அதற்கான பதில் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும். அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

The post ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு எடையை தாண்டியது; காசா மீது இதுவரை 25,000 டன் வெடிகுண்டு வீச்சு: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மலேசிய பிரதமர் appeared first on Dinakaran.

Tags : Hiroshima ,Gaza ,Malaysian Prime Minister ,Israel ,Dinakaran ,
× RELATED காசாவின் தெற்கு பகுதியான ரஃபா மீது...