×

வில்லிவாக்கத்தில் பரபரப்பு; வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: ரவுடி கைது

அம்பத்தூர்: ராணிப்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக் (27). ரவடியான இவர், ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட்டில் கூலி வேலை செய்து வருகிறார். திருமணமாகி சுகந்தி என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கார்த்திக், கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னை வில்லிவாக்கம் பொன்னன் கிணறு தெரு பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் குடியேறினார். கார்த்திக், மது பழக்கத்திற்கு அடிமையானவர். அவ்வப்போது கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து வருகிறார். நேற்றிரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த கார்த்திக், மனைவி சுகந்தியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சுகந்தி புகார் செய்தார். அதன்பேரில் வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுகந்தி மற்றும் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்தார் கார்த்திக். அவரிடம் விசாரித்தபோது, போலீசாரை தகாத வார்த்தையால் திட்டியதுடன் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததால், அவர் உளறுவதாக நினைத்து காலையில் விசாரணைக்கு வருமாறு கூறி விட்டு போலீசார் சென்றனர். ஆனால் கார்த்திக் செல்லாததால் போலீசார் அவரது வீட்டுக்கு இன்று காலை சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

வீட்டில் வாளியில்2 நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து கார்த்திக்கை காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். விசாரணையில், கார்த்திக் மீது கிருஷ்ணகிரி, ரத்தனகிரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் அடிதடி வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. கார்த்திக்கை கைது செய்து, எதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வைத்திருந்தார், யாரையாவது கொலை செய்ய சென்னையில் வீடு எடுத்து தங்கியிருந்தாரா? என பல்வேறு கோணங்களில் கார்த்திக்கிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வில்லிவாக்கத்தில் பரபரப்பு; வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Williwack ,Ampathur ,Karthik ,Ranipet ,Chipgat ,Williwagak ,Dinakaran ,
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மாநகர...