×

வலங்கைமான் ஒன்றியத்தில் 50 கிராமங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள்

*தடைபட்ட திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் புத்துயிர்

வலங்கைமான் : திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதிச்சமங்கலம், ஆவூர் உள்ளிட்ட 11 கிராம ஊராட்சிகளில் வரும் நிதி ஆண்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், கடந்த அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட நிலையில் அத்திட்டங்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்பதற்கு எடுத்துக்காட்டாக கடந்த திமுக ஆட்சியில் 2006- 2011ம் ஆண்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகள், மக்கள்தொகை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு சுழற்சிமுறையில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பழைய குளங்கள் தூர்வாரப்பட்டு, படிக்கட்டுகள், பக்கவாட்டு சுவர்கள் அமைக்கப்பட்டன.

இவற்றில் மிக முக்கியமானதாக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிதாக நூலகம் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.இந்நிலையில், 2011ல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அண்ணா மறுமலர்ச்சித் திட்ட பணிகளை முடக்கியது. தற்போது திமுக ஆட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பொதுமக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II ஐ செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

இத்திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் ஏற்கனவே பிறத்திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை தவிர்த்து, கூடுமானவரை ஊராட்சிகளில் நீண்டகால, நிலுவையிலுள்ள பணிகள் மற்றும் புதிய பணிகளை கண்டறிந்து அதனை நிறைவேற்றுவதுடன், பிற முக்கிய திட்டப்பணிகளையும் நிறைவேற்ற சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சிகளின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II-ன்கீழ் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில், குளம், குட்டைகளை தூர்வாருதல், அங்காடி உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டுவது, சாலை வசதி உள்ளிட்ட அனைத்துத் திட்டப்பணிகளையும் முழுமையாக நிறைவேற்றி தங்களது ஊராட்சிகளை முன்மாதிரி கிராமங்களாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் ஆலங்குடி, புளியகுடி, அன்னுக்குடி, வேலங்குடி, நார்த்தாங்குடிஉள்ளிட்ட 50 கிராம ஊராட்சிகள் உள்ளன.

இவற்றில் குக்கிராமங்கள் அதிகமாக உள்ள மேலவிடையல், மாணிக்கமங்கலம், அரவூர், மணலூர், மாளிகைதிடல், உத்தமதானபுரம், ஏரி வேலூர் மற்றும் 83 ரகுநாதபுரம் ஆகிய எட்டு கிராம ஊராட்சிகள் அடையாளம் காணப்பட்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021 -22ம் நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ளபட்டது.

இந்த ஊராட்சிகளுக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் நீர்நிலைகளை புனரமைப்பதற்கு என 30 சதவீதமும், குக்கிராமங்களில் தெருக்கள் மற்றும் வீதிகளை அமைத்தல் மேம்படுத்த 25 சதவீதமும், சமத்துவ சுடுகாடு மற்றும் இடுகாடு என்று பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக 10 சதவீதமும், பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொது பயன்பாட்டு கட்டமைப்புகளை உருவாக்க 15 சதவீதமும், பசுமை மற்றும் சுத்தமான கிராமத்துக்காக 10 சதவீதமும் வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகளைப் ஒருங்கிணைப்பதற்கு 10 சதவீதமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2022-23ம் நிதிஆண்டில் வலங்கைமான் ஒன்றியத்துக்கு உள்பட்ட மூலாழ்வாஞ்சேரி, வேலங்குடி, வீராணம், தென்குவளவேலி, வடக்குபட்டம், மருவத்தூர், புளியக்குடி, ஆலங்குடி, ஊத்துக்காடு, நார்த்தாங்குடி, மூனியூர் உள்ளிட்ட 11 கிராம ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோன்று 2023-24ம் நிதியாண்டில் சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, கீழ விடையல், கொட்டையூர், மதகரம், மணக்கால் பாடகச்சேரி, பெருங்குடி, சித்தன்வாலூர், தொழுவூர், விளத்தூர் உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் முதல்கட்டமாக 19 கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

2024-25ம் நிதி ஆண்டில் ஆதிச்சமங்கலம், ஆவூர், அரித்துவாரமங்கலம், களத்தூர், கண்டியூர், மாத்தூர், நல்லூர், பாப்பாக்குடி, பூனாயிருப்பு உள்ளிட்ட 11 கிராம ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 2025- 26 நிதியாண்டில் ரெகுநாதபுரம், விருப்பாட்சிபுரம் உள்ளிட்ட 9 கிராம ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் நடைபெற உள்ளது.

மேற்கொள்ளப்படும் பணிகள்

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II ன் கீழ் ஊராட்சிகளில் குறைந்தபட்ச அடிப்படை நிதியாக தலா ரூ.30 லட்சம் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் வழங்கப்படுகிறது. மேலும், செயல்திறன் ஊக்க நிதியாக ரூ.5 லட்சம் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்த நிதி மூலம் குக்கிராமங்களில் தெருக்கள் அமைத்தல், மேம்படுத்துதல், சமத்துவ சுடுகாடு, இடுகாடு என பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளுதல், பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு, பொது பயன்பாடு கட்டமைப்புகளை உருவாக்குதல், பசுமை, சுத்தமான கிராமப் பணிகள், வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல் வசதிகளை ஒருங்கிணைத்தல் என அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் – IIன் கீழ் மேற்கண்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

The post வலங்கைமான் ஒன்றியத்தில் 50 கிராமங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் appeared first on Dinakaran.

Tags : Valangaiman Union ,DMK ,Valangaiman ,Tiruvarur district ,Adichamangalam ,Aaur ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு