×

கோயம்பேடு மார்க்கெட்டில் ஆட்டோ திருடிய தொழிலாளி கைது

அண்ணாநகர்: கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (48). ஆட்டோ ஒட்டி வருகிறார். நேற்று முன்தினம் கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு சவாரிக்கு சென்ற சுரேஷ், சிறுநீர் கழிப்பதற்காக ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர், சுரேஷ் ஆட்டோவை திருடிச்சென்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த நபர், ஆட்டோவுடன் அங்கிருந்து தப்பினார். புகாரின்பேரில், கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர்.

அதில், அந்த ஆட்டோ வியாசர்பாடி பகுதியில் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், போலீசார் விரைந்து சென்று, ஆட்டோவில் இருந்த அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பாக்கியராஜ் (எ) தக்காளிராஜ் (48) என்பதும், கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருவதும், போதுமான வருமானம் கிடைக்காததால் ஆட்டோவை திருடி குறைந்த விலையில் விற்க முடிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், பாக்கியராஜை கைது செய்தனர்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் ஆட்டோ திருடிய தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Koyambedu market ,Annanagar ,Suresh ,Koyambedu ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை வீழ்ச்சி