×

இடிந்து கிடக்கும் அரசுப்பள்ளி சுற்றுச்சுவர்: புதிதாக கட்டித்தர பெற்றோர்கள் கோரிக்கை

 

ஊத்துக்கோட்டை: ஆரணி பேரூராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இடிந்து கிடக்கும் சுற்றுச்சுவரை முழுமையாக அகற்றிவிட்டு புதிதாக சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சி ஜி.என்.செட்டி தெருவில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் வளாகத்தில், 3 கான்கீரிட் கட்டிடமும், ஒரு பழைய ஓடு போட்ட கட்டிடம் உள்ளது.

இதில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய சீமை ஓடு போட்ட கட்டிடம் பழுதடைந்ததால், இந்த கட்டிடம் அகற்றப்பட்டது. பழைய ஓட்டு கட்டிடத்தை அகற்றும் போது அங்கிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த பள்ளியானது ஆரணியாற்றின் அருகே உள்ளதால், சுற்றுச்சுவர் அமைக்காததால் முட்புதர்கள் வளர்ந்து விஷ பாம்பு மற்றும் பூச்சிகள் வருவதாகவும், மேலும் சுற்றுச்சுவர் மற்றும் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் என 3 முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் மழைக்காலங்களில் ஆரணியாற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடும். இதனால் மாணவர்கள் தண்ணீரை வேடிக்கை பார்ப்பதற்கு சென்றால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும், இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் மது அருந்துகிறார்கள், எனவே மாணவர்கள் நலனை கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என அவர்கள் கூறினர்.

The post இடிந்து கிடக்கும் அரசுப்பள்ளி சுற்றுச்சுவர்: புதிதாக கட்டித்தர பெற்றோர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Oothukottai ,Arani ,
× RELATED கட்டி முடித்து 8 மாதங்களாகியும் காட்சி பொருளாக உள்ள அங்கன்வாடி மையம்