×

இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

மாமல்லபுரம்: மாமல்லபுரம் இசிஆர் சாலையில் சம்பவத்தன்று இரவு 2 போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்கள் காரில், நெம்மேலி அரசு கலைக் கல்லூரிக்கு அருகே சென்றபோது, அங்கு ஒரு ஆட்டோவில் சென்ற 2 பேர், போலீசாரின் காருக்கு வழிவிடாமல் சென்றனர். இதையடுத்து, போலீசார் அந்த ஆட்டோவை மடக்கினர். அப்போது, ஆட்டோவில் இருந்த 2 பேர் திடீரென கீழே குதித்து கத்தியை காட்டி அருகில் வந்தால் வெட்டி விடுவேன் என போலீசாரை மிரட்டி விட்டு அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, சில மணி நேரத்திலேயே 2 பேரை பிடித்து வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பெரிய நெம்மேலியை சேர்ந்த ரவி மகன் சரவணன் (25), மானாமதி அடுத்த முள்ளிப்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், தேவனேரியில் ஒரு பைக்கை திருடி சென்று போலீசாரை கத்தியை காட்டி மிரட்டியதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, ஆட்டோ மற்றும் திருடிச் சென்ற பைக்கை பறிமுதல் செய்து 2 பேர் மீதும் வழக்குப் பதிந்து 17 வயது சிறுவனை செங்கல்பட்டு சிறார் சிறையிலும், சரவணனை செங்கல்பட்டு கிளை சிறையிலும் அடைத்தனர். இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை 2 பேர் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Mamallapuram ECR Road ,Nemmeli ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...