×

செங்கல்பட்டில் கடும் பனி மூட்டம் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற வாகனங்கள்: பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் கடும் பனி மூட்டம் காணப்பட்டதால், காலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. மேலும், பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் கடும் அவதி அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை ஜிஎஸ்டி சாலை உள்பட அனைத்து சாலைகளிலும் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால், அச்சாலைகளின் வழியே சென்ற அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றன. மேலும், காலை 8 மணிவரை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டத்திலும் அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜிஎஸ்டி சாலை உள்பட பல்வேறு பகுதி சாலைகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதேபோல், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை செங்கல்பட்டில் ஜிஎஸ்டி சாலை உள்பட அனைத்து சாலைகளிலும் கடும் பனிமூட்டம் நிலவியது.

இதனால், ஜிஎஸ்டி சாலையில் வெளியூர்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றன. இதேபோல், சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் செல்லும் பிரதான சாலைகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால், பரனூர் சுங்கச்சாவடி உள்பட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த பனிமூட்டம் காலை 8 மணிவரை நீடித்தது. இதனால் செங்கல்பட்டு நகரம் மற்றும் தாலுகா பகுதிகளில் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள், காலை 8 மணிக்கு மேல் நடைபயிற்சியை மேற்கொண்டனர்.

வழக்கமாக மார்கழி மாதத்தில்தான் கடும் பனிமூட்டாக காணப்படும். எனினும், வழக்கத்துக்கு மாறாக ஐப்பசி மாதத்தில் ஏற்பட்ட கடும் பனிமூட்டத்தினால் வாகன ஓட்டிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் அவதிப்பட்டனர். செங்கல்பட்டை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் அதிகாலை நேரத்தில் கடும் பனிமூட்டத்தினால் விவசாய மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்ல முடியாமல் ஏராளமான மக்கள் அவதிப்பட்டனர். மேலும், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கடும் பனிமூட்டத்தினால் மின்சார மற்றும் அனைத்து ரயில்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி, ஊர்ந்து சென்றன. இதனால் செங்கல்பட்டு மாவட்ட மக்களின் காலைநேர பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

The post செங்கல்பட்டில் கடும் பனி மூட்டம் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற வாகனங்கள்: பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chengalpat ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...