×

திருமுல்லைவாயலில் பரபரப்பு போலீசை தாக்கிய 4 பேர் கைது

ஆவடி: திருமுல்லைவாயலில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட அடிதடி தகராறு குறித்து விசாரிக்க வந்த சிறப்பு படை போலீஸ் மற்றும் ஒருவரை சரமாரி தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆவடி அருகே திருமுல்லைவாயல், அந்தோணி நகர் பூங்கா அருகே நேற்றிரவு நேற்றுமுன்தினம் இரவு இருதரப்பினர் அடிதடி தகராறில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு திருமுல்லைவாயல் காவல்நிலைய சிறப்பு காவல் படையை சேர்ந்த முகமது அலி(36), நரேந்திரன்(36) என்ற 2 காவலர்கள் சென்று விசாரித்தனர். அப்போது தகராறில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் தப்பி சென்றுவிட்டனர்.

இத்தாக்குதலில் படுகாயம் அடைந்த வேலூரை சேர்ந்த பிரபு(28), பிரேம்(26) ஆகிய 2 பேரிடம் காவலர்கள் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் இருவரையும் அதே பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் சரமாரி தாக்கிவிட்டு தப்பி சென்றதாகத் தெரியவந்தது. பின்னர் இருவரையும் 2 காவலர்களும் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். நடுவழியில் சம்பவ இடத்தில் தனது செல்போன் கீழே விழுந்துள்ளது. அதை எடுக்க வேண்டும் என காவலர்களிடம் பிரபு கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, மீண்டும் சம்பவ இடத்துக்கு 2 பேரையும் போலீசார் பைக்கில் அழைத்து வந்துள்ளனர். சம்பவ இடத்தில் பிரபு மற்றும் காவலர் நரேந்திரன் செல்போனை தேடியபோது, தங்களை அடிக்க பிரபு அடியாட்களை அழைத்து வந்ததாக கருதி, அங்கு பதுங்கியிருந்த மர்ம கும்பல் மீண்டும் காவலர் நரேந்திரன் மற்றும் பிரபுவை சரமாரி தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் திருமுல்லைவாயல் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, காவலர் மற்றும் ஒருவரை தாக்கிய மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரித்தனர்.

மர்ம கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த காவலர் நரேந்திரன் மற்றும் பிரபுவை, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று காலை காவலர் மற்றும் ஒருவரை சரமாரி தாக்கிய கும்பலை சேர்ந்த திருமுல்லைவாயல், இஎஸ்ஐ அண்ணாநகரை சேர்ந்த உதயா(28), ரவிக்குமார்(24), சக்திவேல்(28), வெற்றி(31), செல்வம்(36) ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், ரவிக்குமாருக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்ப்பு இல்லை என்பதால் அவரை மட்டும் போலீசார் விட்டுவிட்டனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்டு தலைமறைவான கும்பலை சேர்ந்த சிலரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post திருமுல்லைவாயலில் பரபரப்பு போலீசை தாக்கிய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirumullaivayal ,Aavadi ,
× RELATED பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை...