×

ஆன்மிகம் பிட்ஸ்: வடநாட்டுத் தீபாவளி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

காவிரியில் கங்கை

ஐப்பசி மாதத்தில் கங்கை நதியே காவிரியில் வந்து தன்னிடம் தேர்ந்திருக்கும். மனிதர்களின் பாவத்தைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். இம்மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலையில் காவிரியில் நீராடி காவிரியோடு கங்கையையும் வணங்குவார்கள். சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம், மஞ்சள், குங்குமம் வழங்குவார்கள். காவிரி நதி ஓடும் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, மாயவரம் போன்ற பகுதிகளில் வாழும் பெண்களிடம் இம்மரபு இன்றும் போற்றப்படுகிறது.

மகாலட்சுமி உதித்த நாள்

பாற்கடலில் அவதரித்த மகாலட்சுமி, தன்மனம் கவர்ந்த மகாவிஷ்ணுவிற்கு மாலை சூட்டினாள், திருமார்பன் (ஸ்ரீவத்ஸன்) என்ற பெயர் பெருமானுக்கு ஏற்படும் வண்ணம் எம்பெருமாள் இதயத்தில் இடம்பிடித்தாள். மகாலட்சுமி பாற்கடலில் அவதரித்த நாள், எம்பெருமானை மணந்தநாள் ‘தீபாவளி’ திருநாள்.

காளிவதம்

வங்காளத்தில் நந்த விஜயன் என்னும் அசுரனை காளிவதம் செய்த நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று காளி பூஜையையும், பெரிய அளவில் விமரிசையாக விசேஷமாக செய்கின்றனர். சிங்கப்பூர் அரசு ஒவ்வொரு தீபாவளியின் போதும், தீபாவளி சம்பந்தமான ஓவியங்களை தபால் உறையில் வெளியிட்டு வாழ்த்து தெரிவிக்கிறது. மத்தாப்பு, பட்டாசு கொளுத்துவதற்கான காரணம், நரகாசுரனையும் அரக்கர்களையும் ஸ்ரீகிருஷ்ண பகவான் சம்ஹாரம் செய்தார். உலகின் ‘தீமை’ எனும் இருள் விலகி ‘சாந்தி, எனும் ‘ஒளி’ நிலவியதன் நினைவாக அசுரர்களை (தீமையை) விரட்டும் பாவனையில் வெடிகள் வெடித்ததும், அஞ்ஞான இருளைப் போக்க மத்தாப்புகளை கொளுத்தியும் நாம் தீபாவளியைக் கொண்டாடுகின்றோம்.

பார்வதிதேவி விரத பலன்

கவுதம முனிவர் கூறிபடி பார்வதி தேவி, கேதார கவுரி விரதம் இருந்தார். தீபாவளி நாளில் உமாதேவிக்கு காட்சி கொடுத்த பரமேஸ்வரன், பார்வதி தேவிக்கு சரி பாதி உடம்பைக் கொடுத்தார் என்பது புராண வரலாறு.

வடநாட்டுத் தீபாவளி

தமிழகத்தில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் கார்த்திகைத் தீப திருநாளைத்தான் வட நாட்டினர் ‘தீபாவளி’ என்னும் பெயரோடு கொண்டாடி வருகின்றனர்.

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

புரட்சித் துறவியாக விளங்கிய அருட்பிரகாச வள்ளலார் எனப்படும் இராமலிங்க சுவாமிகள் மாபெரும் சித்த புருஷராவார். இவர் இறைவனை ஒளிவடிவில் வழிபடும் முறையைத் தோற்றுவித்தார். கடலூர் மாவட்டத்திலுள்ள வடலூரில் அவர் அமைத்த சத்தியஞான சபையில் ஒரு தகர விளக்கை ஏற்றி வைத்துள்ளார். அது தேய்க்கப்பட்ட கண்ணாடியின் பின்புறம் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த விளக்கின் சுடரொளி மட்டும் ஒளிப்பந்து போன்று காட்சி அளிக்கிறது. இப்படித் தெரியும் ஒளி வட்டத்தையே அருட்பெரும் ஜோதி ஆண்டவராக வழிபடும் வழக்கத்தை அவர் தோற்றுவித்தார். இந்த கண்ணாடியின் முன்பாக ஏழுதிரைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாத பூசநாளிலும் ஆறு திரைகள் முழுவதுமாகவும், ஏழாவது திரை பாதி அளவிலும் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. தைமாதப் பூச நாளில் ஏழு திரைகளும் முழுவதுமாக விலக்கப்பட்டு ஆறுகால பூஜை நடத்தப்படுகிறது.

ஜைன தீபாவளி

ஜைன மதகுருவான மகாவீர் முக்தியடைந்த தினமும் தீபாவளியாக கொண்டாடப் படுகிறது. உலகிற்குப் பேரொளியாகத் திகழ்ந்த அவர், மறைந்ததால் உலகை இருள் சூழ்ந்த தென்றும், ஆனால் அவரது போதனைப்படி அந்த இருளை அகற்ற தீபங்கள் ஏற்றி வழிபடுவதாகவும் கூறுகின்றனர்.

அன்னபூரணி தரிசனம்

தீபாவளியன்று அன்னபூரணியை தரிசிப்பது மிகவும் விசேஷம். காசி அன்ன பூரணி, தீபாவளி சமயத்தில் மூன்று நாட்கள், ஒரு கையில் தங்கக் கரண்டியும் மறு கரத்தில் தங்கக் கிண்ணமும் ஏந்தி தங்க அன்னபூரணியாக தரிசனம் தருகிறாள், அம்பிகை.

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்

The post ஆன்மிகம் பிட்ஸ்: வடநாட்டுத் தீபாவளி appeared first on Dinakaran.

Tags : Kaveri Ganges ,Aippasi River Ganges ,Kaveri ,
× RELATED காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4...