×

20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி. விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்: டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி. விண்ணப்பத்தை நிராகரித்திடுக என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க அனுமதி கோரியிருக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட திருவாடனை, முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி ஆகிய 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை ரூ.675 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க அனுமதி வழங்குமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே தோண்டப்பட்டிருக்கும் எண்ணெய் கிணறுகளில் இருந்து கசிவு ஏற்பட்டு நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க முயற்சிப்பது மாநிலத்தின் இயற்கை வளங்களை முற்றிலுமாக அழிப்பதற்கு சமமாகும்.

ஏற்கனவே வறட்சி மிகுந்த மாவட்டமாக உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை மேலும், பாலைவனமாக்க முயற்சிக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் அபாயகரமான இத்திட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி கோரியிருக்கும் அந்நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிப்பதோடு, காவிரி படுகை ராமநாதபுரம் மாவட்டம் வரை நீள்கிறது என்பதை உணர்ந்து, அம்மாவட்டத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் கொண்டு வந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

The post 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி. விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்: டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : ONGC ,DTV ,Dinakaran ,Chennai ,DTV Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...