×

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

 

செங்கல்பட்டு, நவ.6: செங்கல்பட்டு மாவட்டத்தில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளதாவது: செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், கடந்த 1.10.2023 உடன் துவங்கும் காலாண்டுக்கு படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு 10ம் வகுப்பு (தேர்ச்சி அல்லது தோல்வி), அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிந்திருந்தாலே போதுமானது. பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், நர்சிங் போன்ற தொழிற்பட்ட படிப்புகள் முடித்தவர்கள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உதவி தொகையை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதுக்குள், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம் பெற விரும்புபவர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்று கொள்ளலாம்.

பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை, வரும் டிசம்பர் 10ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை திட்டப்பிரிவில், தகுந்த அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு துவக்கிய பாஸ் புத்தகத்துடன் நேரில் ஆஜராகி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Rahulnath ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டில் ரயில் மறியல்: விவசாயிகள் கைது