×

தீபாவளி பண்டிகை விற்பனை விறுவிறுப்பு கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்: தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை திக்குமுக்காடியது, பட்டாசு, ஸ்வீட் விற்பனையும் களைகட்டியது

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ளதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் பொருட்கள் வாங்க தமிழகம் முழுவதும் நேற்று காலை முதல் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக சென்னை தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகள் மாலை நேரத்தில் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடியது. பட்டாசு மற்றும் ஸ்வீட் விற்பனையும் களை்கட்ட தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 12ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம்.

இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. பல மாவட்டங்களில் காலையில் இருந்தே சூரியனை பார்க்க முடியாத நிலை இருந்தது. அந்த அளவுக்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் நேற்று காலை முதல் பஜார் வீதிகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலைமோதியது. குடும்பம், குடும்பமாக வந்து தீபாவளி பண்டிகைக்கான பொருட்களை தேர்வு செய்து வாங்கி சென்றனர். தங்களுக்கு தேவையான பேன்ட், சர்ட், சுடிதார், ஜீன்ஸ், சேலை, வேஷ்டி உள்ளிட்ட துணிமணிகளை தேர்ந்தெடுத்து வாங்கினர்.

அதே நேரத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் விதவிதமான டிசைன்களில் துணிகள் மார்க்கெட்டில் குவிந்துள்ளது. புதிய மாடல் ஆடைகளையும் மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்ற காட்சியை காணமுடிந்தது. பல துணிக் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நேற்று காணப்பட்டது. கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் கடைகளுக்கு வெளியே காத்து இருந்து பொருட்களை வாங்கி சென்றனர். சென்னையை பொறுத்தவரை காலை முதல் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இடையிடையே சாரல் மழை வேறு பல்வேறு இடங்களில் பெய்தது.

இதனால், தீபாவளி பொருட்கள் வாங்க திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் நேற்று காலை முதலே சென்னையை நோக்கி படையெடுத்தனர். அது மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பொருட்களை வாங்க மக்கள் சென்னைக்கு வர தொடங்கினர். இதனால் வர்த்தக பகுதியான சென்னை தி.நகர், புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை, பிராட்வே, பாடி, மயிலாப்பூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் காலை நேரத்திலேயே வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு தேவையான துணிமணிகளை வாங்கி சென்றனர்.

மாலை 4 மணிக்கு மேல் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. ஒரே நேரத்தில் பெரும்கூட்டம் திரண்டதால் தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் வெள்ளத்தில் குலுங்கின. அது மட்டுமல்லாமல் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் உள்ள கடைகளிலும் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரவு 10 மணி வரை இது நீடித்தது. ஒவ்வொருவரும் குடும்பத்துடன் இறுதிக்கட்ட தீபாவளி பர்சேஸில் மும்முரமாக ஈடுபட்டனர். எங்கு பார்த்தாலும் துணிக்கடைகள் முன்பாக மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.

குறிப்பாக தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியர்களின் உறவினர்கள் அதிக அளவில் புதிய துணிகளை வாங்கியதை காண முடிந்தது. அதே போல சாலையோர கடைகளில் அலங்கார பொருட்கள், பாசி மாலைகள், அணிகலன்கள் போன்றவற்றையும் வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். இதனால், இந்த கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது.

அதே நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் பாதுகாப்பு மற்றும் வழிப்பறி, திருட்டு சம்பவங்களை தடுக்க தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ளதால் இன்று முதல் பஜார் வீதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், இறுதிக்கட்ட தீபாவளி பர்சேஸ்ஸை சமாளிக்கும் வகையில் கடைகளை காலையிலேயே திறக்கவும் கடைக்காரர்கள் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

* பட்டாசு, சுவிட் விற்பனை:
தீபாவளி பண்டிகையில் புத்தாடைகளுக்கு பிறகு மக்கள் மனதில் இடம் பிடிப்பது பட்டாசும், சுவிட்டும் தான். ஒவ்வொருவரும் குடும்பத்துடன் பட்டாசுகளை வெடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தீவுத்திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தெருக்களிலும் புதிதாக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளிலும் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் நண்பர்கள், விருந்தினர்களுக்கு சுவிட் வழங்குவதற்காக சுவிட் கடைகளில் பொதுமக்கள் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இதனால் அனைத்து சுவிட் கடைகளில் றே்று ஆர்டர்கள் வந்து குவிந்த காட்சியை காண முடிந்தது.

* ரயில், பஸ் ஹவுஸ் ரிசர்வேஷன் புல்:
சென்னையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சார்ந்தவர்கள், கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், அவர்கள் முன்கூட்டியே ரயில்களில் முன்பதிவு செய்ய தொடங்கினர்.

இதனால், சென்னையில் இருந்து வருகிற வியாழக்கிழமை முதல் செல்லும் அனைத்து ரயில்களும் ஹவுஸ் புல்லாகியுள்ளது. அனைத்து ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் அதிக அளவில் இருந்து வருகிறது. மேலும் அரசு, தனியார் பஸ்களிலும் முன்பதிவு மும்முரமாக நடந்து வருகிறது. இதனால், வரும் நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

* தீபாவளி பொருட்கள் வாங்க திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் நேற்று காலை முதலே சென்னையை நோக்கி படையெடுத்தனர்.

* பக்கத்து மாநிலமான ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பொருட்களை வாங்க மக்கள் சென்னைக்கு வர தொடங்கினர்.

* இதனால் வர்த்தக பகுதியான சென்னை தி.நகர், புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை, பிராட்வே, பாடி, மயிலாப்பூர், குரோம் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் காலை நேரத்திலேயே வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

The post தீபாவளி பண்டிகை விற்பனை விறுவிறுப்பு கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்: தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை திக்குமுக்காடியது, பட்டாசு, ஸ்வீட் விற்பனையும் களைகட்டியது appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,D. Nagar ,Purasaivakkam ,Vannarpet ,CHENNAI ,Diwali ,Vannarappeta ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...