×

தீபாவளி கொண்டாட கூலித்தொழிலாளிகளுக்கு சுயஉதவிகுழு கடன் உதவி

 

க.பரமத்தி, நவ.5: கூலித்தொழிலாளர்கள் தீபாவளியை கொண்டாட கூட்டுறவு வங்கிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் வழங்க வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது க.பரமத்தி. இதன் அருகில் முன்னூர், குப்பம், அத்திப்பாளையம், நடந்தை, காருடையம்பாளையம், நெடுங்கூர், பவித்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கூலித்தொழிலாளர்கள். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால் தொழிலாளர்கள் கடும் உழைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தீபாவளி செலவுக்கு போதிய அளவு வருமானம் இருப்பதில்லை. மாதச்சம்பளம் பெறும் மற்ற தொழிலாளர்களுக்கு போனஸ்கூட கிடைப்பதில்லை. ஆனால் தினக்கூலி தொழிலாளர்களுக்கு போனஸ் கிடையாது. இதனால் தீபாவளி செலவை சமாளிக்க விவசாய கூலி தொழிலாளர்கள் கந்து வட்டிக்காரர்களை அணுக வேண்டிய நிலை உள்ளது.

கழுகுபோல் காத்திருக்கும் கந்துவட்டி கும்பல் ரன் வட்டி, மீட்டர் வட்டி, வார வட்டி என இந்த கூலி தொழிலாளர்களை கசக்கி பிழிகின்றனர். தற்போது கந்துவட்டி தொழில் கடந்த சில நாட்களாகவே களைகட்ட துவங்கியுள்ளது. இதில் சிக்கும் கூலி தொழிலாளர்கள் அவர்களுக்கு அடிமையாகும் அவலநிலை ஏற்படுகிறது. ஆண்டு முழுவதும் உழைத்து பெறும் பணத்தை கந்துவட்டி கும்பலுக்கே அளிக்கும் நிலை ஏற்படுகிறது. இது போன்ற சூழ் நிலையை தவிர்க்க, தீபாவளி, போன்ற முக்கிய பண்டிகை காலங்களில் கூட்டுறவு வங்கிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு கடன் வழங்கினால் கூலி தொழிலாளர்கள் கடனை சிரமம் இன்றி அடைக்க முடியும் மேலும் கந்து வட்டி கும்பலிடம் இருந்து தப்ப முடியுமென கூலி தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post தீபாவளி கொண்டாட கூலித்தொழிலாளிகளுக்கு சுயஉதவிகுழு கடன் உதவி appeared first on Dinakaran.

Tags : Self Help Group ,Diwali ,K. Paramadhi ,
× RELATED பெரியபாளையத்தில் காட்சிப் பொருளான மகளிர் சுயஉதவிக் குழு கட்டிடம்