×

இன்று அதிகாலை தற்கொலை படை கைவரிசை; பாக். விமானப்படை தளம் மீது தாக்குதல்: விமானங்கள் எரிந்து நாசம்; 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று அதிகாலை விமானப்படை தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் விமானங்கள் எரிந்தன. 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டின் விமானப்படை தளம் ஒன்று பஞ்சாப் மாநிலம் மியான்வாலி என்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த விமானப்படை தளத்திற்குள் இன்று அதிகாலை துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள், விமானப்படை தளத்தின் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். மியான்வாலியில் நடந்த தாக்குதல் சம்பவத்தால் உஷாரான பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தனர்.

அதனால் அப்பகுதியில் இன்று காலை முதலே துப்பாக்கிச் சூடு மற்றும் பயங்கர வெடிசத்தத்தால் அந்த பகுதி முழுவதும் அதிர்ந்தது. இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-ஜிஹாத் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாதிகளின் திடீர் தாக்குதல் சம்பவத்தை வெற்றிகரமாக முறியடித்ததாகவும், தாக்குதலில் ஈடுபட்ட 6 தீவிரவாதிகளில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தால் விமானப்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் கவச வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து ராணுவத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ‘மியான்வாலியில் செயல்பட்டு வரும் பயிற்சி விமான தளத்தின் மீதான தாக்குதல் முறியடிக்கப்பட்டது. 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; 3 பேர் கைது செய்யப்பட்டனர். பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் 17 வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், இந்த தொடர் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. விமான நிலையத்தின் பணியாளர்கள் மற்றும் விமானப் படையின் சொத்துக்கள் பாதுகாப்பாக உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஏற்கனவே தரையிறக்கப்பட்ட மூன்று விமானங்கள் மற்றும் ஒரு எரிபொருள் கவச வாகனம் சேதம் ஏற்பட்டது.

தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்த்து போரிட ராணுவம் தயார் நிலையில் உள்ளது’ என்று கூறியுள்ளது. பாகிஸ்தான் விமானப்படை தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்நாட்டின் அனைத்து விமான நிலையங்களும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post இன்று அதிகாலை தற்கொலை படை கைவரிசை; பாக். விமானப்படை தளம் மீது தாக்குதல்: விமானங்கள் எரிந்து நாசம்; 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : ISLAMABAD ,PAKISTAN ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா