சென்னை: மயிலாப்பூர் பிரசன்ன விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த சங்கர். இவர், திருவான்மியூரில் வீடு கட்டி வந்தார். இந்த வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெற, 2015 ஜூன் 11ம் தேதி குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் மனு அளித்தார். இணைப்புக்கான கட்டணம் 40,100 ரூபாயை செலுத்தினார். இதையடுத்து, சங்கர் வீட்டுக்கு ஆய்வுக்கு சென்ற இளநிலை பொறியாளர் அருமை செல்வி (55) சங்கரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதுகுறித்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையிடம் சங்கர் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தலின்படி, ரூ.15 ஆயிரத்தை அருமை செல்வியிடம் சங்கர் கொடுத்தபோது, அருமை செல்வியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.மணிமேகலை முன்பு விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கே.உஷாராணி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அருமை செல்விக்கு, 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
The post வீட்டு குடிநீர் இணைப்புக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெண் இன்ஜினியருக்கு 4 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.