×

கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் பழைய விதிகள்படி சசிகலா வழக்கு தொடர முடியாது: இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தரப்பில் ஐகோர்ட்டில் வாதம்

சென்னை: அதிமுக இடைக்கால பொது செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து, சசிகலா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் முன்பு இரண்டாவது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2016ம் ஆண்டு இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கான நோட்டீஸ் அனுப்பியது யார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அதிமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், 2016 மற்றும் கடந்த 2022 ஜூலை 11ம் தேதிகளில் நடந்த பொதுக் குழு கூட்டங்களுக்கு அதிமுக தலைமை கழகம் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன. அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தான் கட்சியின் பொதுச்செயலாளர். வேட்பாளருக்கான சின்னத்தை ஒதுக்குவதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திடுவதற்கான அதிகாரம் அவருக்கு மட்டுமே உள்ளது. தேர்தல் ஆணையமும் இதை அங்கீகரித்துள்ளது.

கட்சியின் வளர்ச்சிக்காக அதிமுகவின் சட்டவிதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. எனவே, பழைய விதிகளை அடிப்படையாக கொண்டு சசிகலா வழக்கு தொடர முடியாது என்று வாதிட்டார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கடந்த 2017ம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கபட்ட நிலையே தற்போது வரை நீடிக்கிறது. எனவே, இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவை நீக்கியது செல்லும் என்று வாதிட்டார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், கடந்த ஆண்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு விட்டன. தற்போது பொதுச்செயலாளர் பதவி மட்டுமே உள்ளது. அந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று வாதிட்டார். வழக்கில் வாதங்கள் நிறைவடையாததால், விசாரணையை வரும் 6ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

 

The post கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் பழைய விதிகள்படி சசிகலா வழக்கு தொடர முடியாது: இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தரப்பில் ஐகோர்ட்டில் வாதம் appeared first on Dinakaran.

Tags : Sasicala ,iCourt ,Chennai ,Sasikala ,general secretary of state ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...