×

திருவள்ளூரில் நிலத்தை விற்பனை செய்து ரூ.7.7 கோடி மோசடி நடிகை கவுதமி புகாரில் சென்னை தொழிலதிபர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னை: திருவள்ளூரில் நடிகை கவுதமிக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ததில் ரூ.7.7 கோடி மோசடி செய்த வழக்கில் சென்னை தொழிலபதிபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.  சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை கவுதமி அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை அக்கரை பக்தி வேதாந்தா சுவாமி அவென்யூ பகுதியில் எனது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனது உடல் நிலை திடீரென ஏற்பட்ட பின்னடைவு காரணமாக நான் வாங்கிய அசையா சொத்துக்களை என்னால் நிர்வகிக்க முடியவில்லை.

2004ம் ஆண்டு எனது மகளுக்கு 4 வயது இருக்கும் போது எனக்கு புற்றுநாய் இருப்பது கண்டறியப்பட்டது. எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், எனது குழந்தையின் எதிர்க்காலத்தை பாதுகாக்க எனது தாயார் டாக்டர் வசுந்தரா தேவியும், நானும் திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்தை கடந்த 1990ம் ஆண்டு வாங்கினோம். அதில் 8.61 ஏக்கர் நிலம் எனது பெயரில் இருந்தது. எனது தாய் கடந்த 2000ம் ஆண்டு இறந்துவிட்டார்.

சென்னை வேளச்சேரியை சேர்ந்த அழகப்பன் என்பவர் மூலம் அண்ணாநகர் 6வது அவென்யூ பகுதியை சேர்ந்த தொழிலதிபர் பலராமன் மற்றும் செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி பகுதியை சேர்ந்த ரகுநாதன் ஆகியோர் அறிமுகமாகினர். எனது பெயரில் உள்ள 8.16 ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்து தருவதாக உறுதி அளித்தனர். அதனால் அந்த நிலத்தை கடந்த 2015ம் அண்டு பலராமன், ரகுநாதன் ஆகியோருக்கு தனி பொது அதிகார ஆவணம் எழுதிக் கொடுத்தேன். பிறகு இந்த இடத்தை தனியார் நிறுவனம் வாங்க விரும்புவதாக கூறினர். மேலும், நிலத்தில் பிரச்னை இருப்பதாக கூறி ரூ.4.10 கோடிக்கு விற்பனை செய்ததாக 2தவனையில் பணத்தை கொடுத்து விட்டு கையெழுத்து பெற்று சென்றனர்.

பின்னர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து கடிதம் ஒன்று வந்தது. அதில் கோட்டையூரில் உள்ள சொத்துக்கள் ரூ.11,17,38,907 க்கு விற்பனை செய்ததில் மூலதன ஆதாய வரி ரூ.2,61,25,637 கட்டவில்லை என்று நோட்டீஸ் வந்தது. அதன் பிறகு எனது அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதை கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, நிலம் விற்பனை தொகையில் 25 விழுக்காடு ரூ.2,61,25,637 கட்டவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ரூ.65,31,500 கட்டியுள்ளேன். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

பின்னர் எனது சொத்தை விற்பனை செய்தது தொடர்பான ஆவணங்களை சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நகல் எடுத்து பார்த்த போது தான், நிலத்தை விற்பனை செய்ய பவர் ஏஜெண்டாக இருந்து பலராமன், ரகுநாதன் ஆகியோர் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 6 ம் தேதி 8.16 ஏக்கர் நிலம் விற்பனை செய்ததன் மூலம் ரூ.11,17,38,907 பணம் பெற்றுள்ளனர். அதில் ரூ.4.10 கோடி மட்டும் பணத்த கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.7,07,38,908 பணம் கொடுக்காமல் இருவரும் பறித்துக் கொண்டு ஏமாற்றி விட்டனர்.

எனவே இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு நடிகை கவுதமி புகாரில் கூறப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நடிகை கவுதமிக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ததில் ரூ.7.7 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அழகப்பனின் கூட்டாளியான சென்னையை சேர்ந்த பலராமன் (64) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post திருவள்ளூரில் நிலத்தை விற்பனை செய்து ரூ.7.7 கோடி மோசடி நடிகை கவுதமி புகாரில் சென்னை தொழிலதிபர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Gautami ,Thiruvallur ,Central Crime Branch ,Chennai ,Tiruvallur ,
× RELATED மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்