×

நிலம் தருவதாக கூறி 91 பேரிடம் ரூ.2.10 கோடி மோசடி செய்தவர் கைது

தாம்பரம்: மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் டயர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், மணிகண்டன் மற்றும் அவருடன் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்த 91 நபர்கள் நிறுவனத்தின் தொழிலாளர் சங்கம் மூலமாக எண் 3/9, அசோக் நகர், பி.டி.ராஜன் சாலை, கே.கே.நகர், சென்னை 78ல் உள்ள ரெனில் எஸ்டேட் என்ற நிறுவனம் நடத்தி வரும் மணாளன் என்பவர் மறைமலைநகர், கூடலூர் கிராமத்தில் சதுர அடி 900 ரூபாய் என பிளாட்டுகள் தருவதாக கூறியதால் கடந்த 2021ம் ஆண்டு, நவம்பர் மாதம் முதல் தலா ரூபாய் இரண்டு லட்சம் முதல் ரூபாய் இரண்டரை லட்சம் வரை என 91 நபர்களும் வங்கி கணக்கின் மூலம் மொத்தம் 2.10 கோடி ரூபாய் பணத்தை கொடுத்தும் மணவாளன் பிளாட்களை தராமல் ஏமாற்றி வந்ததாகவும், தாங்கள் கொடுத்த பணம் சம்மந்தமாக கேட்டபோது 40 நபர்களுக்கு பணத்தை திருப்பி தருவதாக எழுதி கொடுத்தும் பணத்தையும் கொடுக்காமல், நிலத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தனர். இந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டதன் பேரில் வழக்கு பதிவு செய்த மத்திய குட்டை பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பணம் பெற்று ஏமாற்றி தலைமறைவாக இருந்த மணாளன் (53) என்பவரை காட்டாங்குளத்தூர் பகுதியில் வைத்து நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post நிலம் தருவதாக கூறி 91 பேரிடம் ரூ.2.10 கோடி மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Manikandan ,Thiramalainagar ,Oragadam ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...