×

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் எண்ணம்: புதுக்கோட்டையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

புதுக்கோட்டை: நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களை கைவிடக்கூடாது என்பதற்காக நீட் பயிற்சி அளிக்கிறோம். மாணவர்களுக்கு பயிற்சி தரும் அதேநேரம், நீட் தேர்வுக்கு எதிராக சட்ட போராட்டமும் நடத்தி வருகிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு போதிய அலுவலர்கள் பணியில் உள்ளார்களா?, அலுவலர்களின் தேவைகள் என்னென்ன?, அங்கு நடைபெறும் பணிகள் முறையாக நடைபெறுகிறதா? நிலுவையில் உள்ள கோப்புகள் என்னென்ன? நபார்டு மூலம் நடைபெறும் கட்டுமான பணிகளின் கோப்புகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியா என்ற கூட்டணி வெற்றி பெறும்போது கண்டிப்பாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி வெற்றி பெறும் வரை நீட் தேர்வு எதிர்க்கொள்ளும் மாணவர்களை கைவிடாமல் இருக்க அவர்களுக்கு தேவையான பயிற்சியும், ஒருபுறம் சட்ட போராட்டமும் நடத்திக் கொண்டிருக்கின்றோம். இன்று மாநில உரிமைகளை ஒன்றிய அரசு பறித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு மிகப்பெரிய பதிலடியை வருகின்ற நாடாளுமன்றத்தில் மக்கள் வழங்குவார்கள். ஏற்கனவே நீட் தேர்வாள் 22 மாணவர்களின் உயிரை நாம் இழந்து உள்ளோம்.

ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது, கடந்த முறை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது நான் நேரடியாக சந்தித்து மூன்று மாத காலம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன், வருகின்ற நவம்பர் எட்டாம் தேதி அவர்களை அழைத்து குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ஆசிரியர் சங்கத்திற்கும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கும் எந்த ஒரு முரண்பாடும் கிடையாது. நாங்கள் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளோம். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற நினைக்கும் போது நிதி தொடர்பான பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் பொறுத்திருங்கள் என்று கூறுகின்றோம். கடந்த 10 ஆண்டு காலம் பொறுத்திருந்தீர்கள், அதனால் பொறுமையாக இருங்கள். நிதி சுமை தீரும்போது கண்டிப்பாக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும்” என்றார்.

The post நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் எண்ணம்: புதுக்கோட்டையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Minister Anbil Mahesh ,Pudukkotka ,Pudukkottai ,Pudukkotda ,
× RELATED தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு...