×

நவ.23 வரை தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

டெல்லி: தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டத்தில் காவிரியில் இருந்து மேலும் 23 நாட்களுக்கு அதாவது, நவம்பர் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரையில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2600 கன அடி என்ற வீதம் கர்நாடகா அரசு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் இன்று மதியம் கூடியது.

இந்தக் கூட்டத்தில் இன்று தமிழகத்தின் சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் கர்நாடகா, புதுச்சேரி, கேரளா அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது; மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக விவாதம் நடத்த முடியாது என காவிரி மேலாண்மை ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நவ.23 வரை தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நவ.1ம் தேதியிலிருந்து 23 நாட்களுக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உத்தரவிட்டுள்ளார்.

The post நவ.23 வரை தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kaviri Management Commission ,Karnataka ,Tamil Nadu ,Delhi ,Kaviri ,Caviar Management Commission ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...