சென்னை : தமிழ்நாடு முழுவதும் அடுக்குமாடி குடியிருப்பில் பொது பயன்பாட்டிற்கான மின்கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டி இருந்தது. இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என்று பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தெரிவித்த கருத்துகளை பரிசீலித்து, கடந்த மாதம் 18ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார்.
அதன்படி,10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும், உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டிற்கு ரூ.8.15 பைசாவிலிருந்து ரூ.5.50 பைசாவாக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து தமிழக அரசின் கொள்கை வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை 10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும், உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு புதிய தாழ்வழுத்த மின்கட்டண வகை IEஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
The post தமிழ்நாடு முழுவதும் அடுக்குமாடி குடியிருப்பில் பொது பயன்பாட்டிற்கான மின்சார கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது!! appeared first on Dinakaran.