×

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் கிரிக்கெட் வீரர் மீது கர்ப்பிணி கமிஷனர் அலுவலகத்தில் புகார்: கருக்கலைப்பு செய்ய உதைப்பதாகவும் கண்ணீர்

சென்னை: வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், 6 மாத கர்ப்பிணியான இளம்பெண் நேற்று முன்தினம் புகார் ஒன்று அளித்தார். அதில், நான் ஐடியில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தேன். எனக்கு கடந்த 2017ம் ஆண்டு சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரரான ராஜகோபால் சதீஷ் அறிமுகமானார். நாங்கள் இருவரும் நட்பாக பழகினோம். கடந்த 2018ம் ஆண்டு ராஜகோபால் என்னை காதலிப்பதாக கூறினார். அவரது காதலை நான் ஏற்றுக்கொண்டேன்.

கடந்த 31.12.2019ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ராஜகோபால், அவரது வீட்டிற்கு என்னை அழைத்தார். நானும் சென்றேன். அப்போது, அவர் எனக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். சிறிது நேரத்தில் நான் மயக்கமடைந்தேன். அப்போது என்னை பலாத்காரம் செய்தார். மயக்கம் தெளிந்ததும், நான் ராஜகோபாலிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டு அழுதேன். அப்போது அவர், என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். பிறகு அதையே காரணம் காட்டி என்னை பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டார்.

அதன்பிறகு அவரது நடவடிக்கையில் மாற்றம் இருந்ததை கண்டு விசாரித்தபோது தான், ராஜகோபாலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது. இதனால் நான் கடும் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் சம்பவம் குறித்து ராஜகோபாலிடம் கேட்டதற்கு, அவர் பதில் சொல்லாமல் என்னை மிரட்டினார். பிறகு வேறு வழியின்றி நடந்த சம்பவத்தை எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள் அவசர அவசரமாக கடந்த 21.02.2022 பரத் என்பருடன் திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால், திருமணமான 3 மாதத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து, கடந்த 13.05.2022 லிருந்து எனது பெற்றொர் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தேன்.அப்போது ராஜகோபால் மீண்டும் என்னை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறினார். நானும் சம்மதம் தெரிவித்தேன். ஆனால் எனது முடிவுக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து என்னை விட்டு தனியாக சென்றுவிட்டனர்.  அதனை தொடர்ந்து ராஜகோபால் என்னை 2வது திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தார். அதன்படி நாங்கள் இருவரும் தனியாக கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம்.

இதனால், தற்போது நான் 6 மாதம் கர்ப்பிணியாக உள்ளேன். இதுபற்றி அறிந்த ராஜகோபால், கருக்கலைப்பு செய்ய என்னை கட்டாயப்படுத்தினார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால், என்னை அவர் கடுமையாக தாக்கி, கொலை மிரட்டல் விடுக்கிறார். இதுதொடர்பாக நான் கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன்மீது போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை. எனவே என்னை திருமணம் செய்வதாக கூறி, குடும்பம் நடத்தி 6 மாதம் கர்ப்பிணியான நிலையில் என்னை விட்டு செல்லும் கிரிக்கெட் வீரர் ராஜகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்து இருந்தார். அந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க தரமணி காவல் நிலைய போலீசாருக்கு, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தரமணி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் வீரர் ஒருவரை நம்பி ஏமாந்த இளம்பெண் ஒருவர் 6 மாத கர்ப்பிணியாக உள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் கிரிக்கெட் வீரர் மீது கர்ப்பிணி கமிஷனர் அலுவலகத்தில் புகார்: கருக்கலைப்பு செய்ய உதைப்பதாகவும் கண்ணீர் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Vepperi ,
× RELATED பெண்ணின் தந்தை மீது தாக்குதல் : காவலர் மீது வழக்கு!!