×

8வது முறையாக மெஸ்ஸிக்கு பலான் டி ஆர் விருது

பாரிஸ்: அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி 8வது முறையாக உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கான ‘பலான் டி ஆர்’ விருது பெற்றுள்ளார். கத்தாரில் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அந்த அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டதுடன் முக்கியமான தருணங்களில் அபாரமாக கோல் அடித்து வெற்றிக்கும் உதவினார் மெஸ்ஸி.

அந்த தொடரின் சிறந்த வீரர் விருதும் அவருக்கே கிடைத்தது. அமெரிக்காவின் இன்டர் மயாமி அணி த லீக்ஸ் கோப்பையை முதல் முறையாக வென்றதிலும் மெஸ்ஸியின் பங்களிப்பு உலக அளவில் பாராட்டுகளை அள்ளியது. அந்த தொடரில் 14 போட்டியில் களமிறங்கிய அவர் 11 கோல் போட்டு அசத்தினார்.  இந்த நிலையில், ஆண்டின் சிறந்த வீரருக்கான ‘பலான் டி ஆர்’ தங்கப் பந்து விருதை மெஸ்ஸி தட்டிச் சென்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று முன்தினம் இரவு நடந்த வண்ணமயமான நிகழ்ச்சியில், மெஸ்ஸி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

உலக அளவில் 100 செய்தியாளர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் இந்த விருதுக்கான வீரர் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. மெஸ்ஸி 8வது முறையாக இந்த விருதை வென்றுள்ளார். மான்செஸ்டர் முன்கள சிட்டி வீரர் எர்லிங் ஹாலண்ட் 2வது இடமும், பிரான்சின் கிளியன் எம்பாப்பே 3வது இடமும் பிடித்தனர். உலகின் தலைசிறந்த கோல் கீப்பருக்கான யாஷின் விருது, அர்ஜென்டினாவின் எமிலியானோ மார்டினசுக்கு வழங்கப்பட்டது. ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான ‘பலான் டி ஆர்’ விருதை ஸ்பெயினின் அய்தானா போன்மதி தட்டிச் சென்றார்.

The post 8வது முறையாக மெஸ்ஸிக்கு பலான் டி ஆர் விருது appeared first on Dinakaran.

Tags : Messi ,Paris ,Lionel Messi ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஸ்குவாஷ் வேலவன் சாம்பியன்