×

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நவ.3ல் கூடுகிறது; தமிழ்நாடு, கர்நாடகா மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு..!!

டெல்லி: டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நவம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் நவம்பர் 3-ல் கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. நேற்றைய தினம் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 89வது கூட்டம் நடைபெற்றது.

காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்ரமணியன் மற்றும் தலைமை பொறியாளர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். கூட்டத்தின் போது தமிழ்நாடு அதிகாரிகள், எங்களது மாநிலத்தில் இருக்கும் வறட்சி நிலையை அடிப்படையாக கொண்டு காவியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 13,000 கன அடி தண்ணீரை கர்நாடகா திறக்க உத்தரவிட வேண்டும். அதேப்போன்று நிலுவை நீரையும் காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும் என தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகா அதிகாரிகள், எங்களது மாநில நீர் தேக்க அணைகளில் போதிய தண்ணீர் கிடையாது என்பதால், தமிழ்நாட்டுக்கு எங்களால் தண்ணீர் திறக்க முடியாது என தெரிவித்தனர். இதேப்போன்று கேரளா மற்றும் புதுவை மாநில அதிகாரிகளும் அவர்களது மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை ஒழுங்காற்று குழு முன்னிலையில் தெரிவித்தனர்.

தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்திருந்தது. நேற்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் நவம்பர் 3ல் கூடுகிறது.

The post டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நவ.3ல் கூடுகிறது; தமிழ்நாடு, கர்நாடகா மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Caviar Management Commission ,Delhi ,Tamil Nadu ,Karnataka ,caviar water regulatory ,
× RELATED வறட்சி நீடித்து வருவதால்...