×

வாலிபருக்கு நடுரோட்டில் சரமாரி கத்தி வெட்டு 4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில்

திருவண்ணாமலை, அக்.31: திருவண்ணாமலை வேங்கிகால் பகுதியில் பைக்கில் சென்ற வாலிபரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை வடக்கு காமாட்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்து(45). அதே பகுதியை சேர்ந்தவர் இவரது நண்பர் ராஜேஷ்(43). இருவரும் நேற்றிரவு 7 மணியளவில், வேங்கிக்கால் பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்துக்கு எதிரே, இரண்டு பைக்குகளில் வந்த நான்கு வாலிபர்கள் முத்து மற்றும் ராஜேஷ் வந்த பைக் மீது மோதினர். இதனால், நிலை தடுமாறி முத்து கீழே விழுந்தார். உடனடியாக மர்ம நபர்கள் கத்தியால் சரமாரியாக அவரை வெட்டினர். பைக்கில் உட்கார்ந்து வந்த ராஜேஷ் கூச்சலிட்டபடியே ஓடினார்.

சரமாரி கத்தி வெட்டினால், முத்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவர் இறந்து விட்டதாக கருதிய நான்கு வாலிபர்களும் அங்கிருந்து பைக்கில் தப்பிவிட்டனர். உடனடியாக, அந்தப் பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து, உயிருக்கு போராடிய முத்துவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி குணசேகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் யார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? இதன் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடுரோட்டில் வாலிபருக்கு சரமாரி கத்தி வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வாலிபருக்கு நடுரோட்டில் சரமாரி கத்தி வெட்டு 4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai's Venkikal ,Thiruvannamalai ,Thiruvannamalai Vengikal ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...