×

கொடைக்கானலில் பூத்துகுலுங்கும் ‘ஐ லவ் யூ’ மலர்கள்: குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் வார இறுதி நாளான நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் காஸ்மோஸ், பாப்பி, உள்ளிட்ட மலர்களை படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத் தலத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். வார இறுதி நாளான நேற்று சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. நகரில் காலை முதல் வானம் மேகமூட்டமாக இருந்தது.

நண்பகல் வேளையில் சாரல் மழை பெய்தது. காலை முதல் கொடைக்கானலில் குளிர்ந்த சூழல் நிலவியது. இந்த சூழலை சுற்றுலாப் பயணிகள் ரசித்து சென்றனர். நகரில் உள்ள பிரையண்ட் பூங்காவில் தற்போது காஸ்மோஸ் மலர்கள், பாப்பி மலர்கள், உள்ளிட்டா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த மலர்களை சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இந்த பூங்காவில் பூத்துள்ள காஸ்மோஸ் மலர்களை 143 பூக்கள் என அழைக்கின்றனர். இந்த மலர்களில் எட்டு இதழ்கள் உள்ளன. 143 என்பது ஐ லவ் யூ என்னும் ஆங்கில எழுத்துகளின் கூட்டு எண்ணிக்கையாகும். எனவே, இந்த மலர்களை ஐ லவ் யூ மலர்கள் என அழைக்கின்றனர்.

டேலியா மலர்கள்

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் உள்ளன. குறிப்பாக, ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உட்பட பல்வேறு பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களில் பல வகையான மலர்கள் மற்றும் அழகு தாவரங்கள் காணப்படுகிறது. இதனை வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சாலையோரங்களில் காட்டு டேலியா மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, அதனை புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

The post கொடைக்கானலில் பூத்துகுலுங்கும் ‘ஐ லவ் யூ’ மலர்கள்: குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Bryant Park ,
× RELATED கோடை கொண்டாட்டத்துக்கு பிரையண்ட்...