×

பாஜக கொடிக்கம்ப விவகாரத்தில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேருக்கு 1 நாள் போலீஸ் காவல்: ஆலந்தூர் மாஜிஸ்திரேட் உத்தரவு

சென்னை: பாஜக கொடிக்கம்ப விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் மாஜிஸ்திரேட் சந்திரபிரபா உத்தரவிட்டுள்ளார். சென்னை அடுத்த பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றும்போது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் அமர்பிரசாத் கைது செய்யப்பட்டார். குரோம்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து தாம்பரம் போலீசார் பாஜக நிர்வாகி அமர் பிரசாத்தை கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, அமர் பிரசாத் ரெட்டி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதில் அமர் பிரசாத் ரெட்டி, பாஜக நிர்வாகிகள் செந்தில், சுரேந்தர் மற்றும் வினோத்குமார் ஆகிய 4 பேரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டும் என்று கூறி கானாத்தூர் போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை இன்று மாஜிஸ்திரேட் சந்திரபிரபா விசாரித்தார். அப்போது அமர் பிரசாத் ரெட்டி மற்றும் பாஜக சார்பாக பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஏற்கனவே இந்த வழக்கு பொய்யாக புனையப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் காவல் தரக்கூடாது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் புலன் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதால் அமர் பிரசாத் ரெட்டி உள்பட பாஜக நிர்வாகிகள் 4 பேருக்கு போலீஸ் காவல் விதிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இருதரப்பு விசாரணையை கேட்ட மாஜிஸ்திரேட் சந்திரபிரபா, அமர் பிரசாத் ரெட்டி உள்பட பாஜக நிர்வாகிகள் 4 பேருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார்.

அமர் பிரசாத் ரெட்டிக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும், ரத்த கொதிப்பு இருப்பதாகவும், அவருக்கு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் உடைகள் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். 5 நாள் போலீஸ் காவல் கோரிய நிலையில் அமர் பிரசாத் ரெட்டியை ஒரு நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பாஜக கொடிக்கம்ப விவகாரத்தில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேருக்கு 1 நாள் போலீஸ் காவல்: ஆலந்தூர் மாஜிஸ்திரேட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Amar Prasad Reddy ,Alandur Magistrate ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...