×

ஆந்திரா ரயில் விபத்து.. பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு; ரூ.10 லட்சம் நிவாரணம்; பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

திருமலை: ஆந்திராவில் சிக்னலுக்காக நின்றிருந்த ரயில் மீது மற்றொரு ரயில் மோதிய விபத்தில் 19 பேர் பலியாகினர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து காகுளம் மாவட்டம் பலாசாவுக்கு செல்லும் பயணிகள் ரயில்(எண்-08532) நேற்று இரவு 7.10 மணி அளவில் விஜயநகரம் மாவட்டம் கொத்தவலசா மண்டலம் கண்டகப்பள்ளியில் சிக்னலுக்காக நின்றிருந்தது. அப்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகட்டாவுக்கு செல்லும் சிறப்பு விரைவு ரயில்(எண்-08504) நின்றிருந்த பலாசா பயணிகள் ரயிலின் பின்பக்கம் மோதியது. இதில் விரைவு ரயிலின் 4 பொதுப்பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ரூ.10 லட்சம் நிதியுதவி

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படுகிறது.

ஆந்திர அரசு நிதியுதவி

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 ;லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளார். ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி உரிய விசாரணை நடத்தவும் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்

ஆந்திரா ரயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விபத்து பற்றிய விவரங்களை ரயில் வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கேட்டறிந்த மோடி, மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். அதே போல், ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட உள்ளது.

ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்க

ரயில் விபத்து குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது X பதிவில், ஒடிசா பாலசோரில் ரயில் விபத்து ஏற்பட்டு, சில மாதங்களேயான நிலையில் ஆந்திரா விஜயநகரத்தில் மீண்டுமொரு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெறவிருப்பம் தெரிவிக்கிறேன்.அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் தங்கள் பயணத்திற்காக ரயில்வேயை நம்பியுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடப்பது கவலையளிக்கிறது. மத்திய அரசும், ரயில்வேயும் இதனை சரி செய்து, ரயில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி, பயணிகளின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

2023ல் நடந்த பெரிய ரயில் விபத்துக்கள்

ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த ஜூன் 2ம் தேதி சிக்னல் கோளாறு காரணமாக 2 பயணிகள் ரயில்கள் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதிக்கொண்ட விபத்தில் 296 பேர் பலியானார்கள். 1,200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பீகாரின் ரகுநாத்பூரில் கடந்த 11ம் தேதி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 4 பயணிகள் பலியானார்கள்.

The post ஆந்திரா ரயில் விபத்து.. பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு; ரூ.10 லட்சம் நிவாரணம்; பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!! appeared first on Dinakaran.

Tags : Andhra ,PM Modi ,Chief MLA K. Stalin ,Thirumalai ,Andhra Pradesh ,AP State ,Andhra train accident ,
× RELATED ஆந்திராவில் நள்ளிரவு விபத்து புதிதாக...