×

அதிமுக-பாஜ கூட்டணி முறிவு உறுதி இல்லை 2 ஆண்டுகளாக வராத எடப்பாடி தேர்தலுக்காக பசும்பொன் வருகிறார்: சசிகலா பேட்டி

அவனியாபுரம்: அதிமுக-பாஜ கூட்டணி முறிவு உறுதி இல்லை. 2 ஆண்டுகளாக வராத எடப்பாடி தேர்தலுக்காக பசும்பொன் வருகிறார்’ என்று சசிகலா தெரிவித்து உள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செய்வதற்காக, சென்னையில் இருந்து வி.கே.சசிகலா நேற்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘‘இரண்டு ஆண்டுகளாக பசும்பொன்னுக்கு வராத இபிஎஸ், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தற்போது வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விருப்பப்பட்டவர்கள் வருவதில் எந்தத் தவறும் இல்லை.

பாஜ கூட்டணி முறிவு என்பதை, தேர்தல் சமயத்தில் தான் உறுதி செய்ய முடியும். இபிஎஸ் பிரதமராவார் என்று ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். இது மக்கள் முடிவு செய்ய வேண்டியது. அவர்களின் ஆசையை சொல்வதாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் குறித்த வியூகம் எங்களுக்கு உள்ளது. எங்கள் கட்சி ஒரு குடும்பம் போல் உள்ளது. இதில் ஓபிஎஸ் விருந்தாளி இல்லை’’ என்றார்.

* பொதுச்செயலாளர் எடப்பாடி இல்லை

சசிகலாவிடம் ‘‘தேர்தலுக்கு முன்பாகவே அனைவரையும் ஒன்றிணைப்பீர்களா? இபிஎஸ் வசம் இருப்பது தான் அதிமுக என தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளதே’’ என்ற நிருபர்கள் கேள்வி கேட்டனர். அவர், ‘‘அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பாக நான் தொடர்ந்த சிவில் வழக்கில் இதுவரை தீர்ப்பு வரவில்லை. அந்தத் தீர்ப்பு தான் இறுதி முடிவு என தேர்தல் ஆணையமும் கூறியுள்ளது. இந்த விபரத்தை தான் அவர்கள் உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்துள்ளனர்’’ என்றார். ‘அதிமுகவிற்கு நீங்கள் பொதுச்செயலாளராகவும், ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறீர்களா’ என்ற கேள்விக்கு, ‘‘ஏற்கனவே நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபோது என்ன நிலை இருந்ததோ, அதுதான் அதிமுகவின் தற்போதைய நிலையாக உள்ளது. நான் தொண்டர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறேன். தேர்தலும் வருகிறது. விரைவில் சுற்றுப்பயணம் தொடங்குவேன்’’ என்றார்.

The post அதிமுக-பாஜ கூட்டணி முறிவு உறுதி இல்லை 2 ஆண்டுகளாக வராத எடப்பாடி தேர்தலுக்காக பசும்பொன் வருகிறார்: சசிகலா பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Pasumbon ,Edappadi ,Sasikala ,Avaniyapuram ,
× RELATED ஓபிஎஸ் குறித்து அண்ணாமலை பேச்சு...