×

கலை அறிவியல் பாடத்திற்கும் நுழைவு தேர்வு வந்தால் இரு மொழி கொள்கைக்கு ஆபத்து: அமைச்சர் பொன்முடி பேச்சு

கீழ்வேளூர்: கலை அறிவியல் பாடத்திற்கும் நுழைவு தேர்வு வந்தால் இரு மொழி கொள்கைக்கு ஆபத்து ஏற்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் 2022ம் ஆண்டுக்கான திருக்குவளை, அரியலூர், பட்டுக்கோட்டை பொறியியல் கல்லூரிகளின் 333 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு உயர்கல்வி அமைச்சரும், அண்ணா பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி 2008ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் பட்டமளிப்பு என்பது விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது. முன்பெல்லாம் இன்ஜினியரிங் படிப்பதற்கு நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இதனால் கிராமப்புற இளைஞர்கள் கல்லூரியில் சேர்வதற்கு கஷ்டப்பட்டு வந்தனர். கிராமத்து இளைஞர்களின் நிலையை கருத்தில் கொண்டு 2007ல் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து இந்த நுழைவு தேர்வை கலைஞர் ரத்து செய்தார். இதன் மூலம் பொறியியல் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை 25,000ல் இருந்து 75 ஆயிரம் ஆக உயர்ந்தது.

அதேபோல கல்லூரிகளில் தமிழ் வழி கல்வியை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தினார். மாணவர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமில்லாமல், வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். பாடத்திட்டங்கள் காலத்திற்குஏற்ப பல்வேறு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு ஏற்ப நான் முதல்வன் திட்டத்தின் மூலம் புதிய திட்டங்களை வகுத்து தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அதேபோல புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி பெண் கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறார். தற்போது பி.ஏ., பி.எஸ்சி, போன்ற கலை அறிவியல் படத்திற்கும் நுழைவு தேர்வு வரும் என்று தெரிகிறது. அப்படி வந்தால் இரு மொழி கொள்கைக்கு ஆபத்து ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.

* இபிஎஸ்சுக்கு திராவிடம் பற்றி தெரியாதது வெட்கக்கேடு

விழுப்புரம் புனித சவேரியர் ஆலயத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: 2024 ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தமிழகத்தில் நீட் தேர்வை நுழைய விடாமல் நிச்சயம் முதல்வர் தடுத்து நிறுத்துவார். ஆரியம், திராவிடம் என்பதை மாணவர்களை கேட்டால் கூட தெரியும். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்சுக்கு இது தெரியவில்லை என்பது ஆச்சரியம். அண்ணாவையும் தெரியாது, திராவிடத்தையும் தெரியாதது அதிர்ச்சியாக இருக்கிறது. 6வது பாட புத்தகத்திலேயே சுதந்திர போராட்ட தியாகிகள் வரலாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் தெரியாமல் எடப்பாடி இருக்கிறார். கட்சி உறுப்பினராக இருந்தால் கூட பரவாயில்லை, பொதுச்செயலாளராக இருந்தும் திராவிடம் தெரியாமல் இருப்பது வெட்கக்கேடு. படிக்காதவர்கள் கூட அண்ணா, கலைஞர் பேசிய பேச்சை கேட்டு திராவிடத்தை பற்றி தெரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்ப பள்ளி புத்தகத்தை படித்தாலே போதும்.

The post கலை அறிவியல் பாடத்திற்கும் நுழைவு தேர்வு வந்தால் இரு மொழி கொள்கைக்கு ஆபத்து: அமைச்சர் பொன்முடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister ,Bonmudi ,Kielvellur ,Ponmudi ,
× RELATED செய்தித்தாள்கள் வாசிப்பதை...