×

சாணார்பட்டி பகுதியில் மஞ்சள் செவ்வந்தி விளைச்சல் அமோகம்

கோபால்பட்டி, அக். 29: சாணார்பட்டி அருகே ராஜக்காபட்டி ஊராட்சிக்குட்பட்ட கல்லுப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் செவ்வந்தி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செவ்வந்தியில் மஞ்சள் செவ்வந்தி, வெள்ளை செவ்வந்தி என இரு வகைகள் உள்ளன. இதில் மஞ்சள் செவ்வந்தி இப்பகுதிகளில் அதிகம் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. நடவு செய்து சுமார் 4 மாதங்களில் பலன் தரக்கூடிய செவ்வந்தி பூக்களின் தேவை பண்டிகை, கோயில் திருவிழா, முகூர்த்த காலங்களில் அதிகமாக இருக்கும். தற்போது ஆயுத பூஜையின் போது செவ்வந்தி ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரை விற்கப்பட்டது. ஆனால் தற்போது தேவை குறைந்ததால் அதன் விலை வீழ்ச்சியடைந்து ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை மட்டுமே விற்கப்பட்டு வருகிறது. எனினும் அடுத்த சில நாட்களில் தீபாவளி, சபரிமலை சீசன் துவங்கவுள்ள நிலையில் செவ்வந்தி பூக்களின் விலை உயர வாய்ப்புகள் உள்ளன என இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இப்பகுதியில் கடந்த ஆண்டு போதிய மழை மழை இல்லாமல் செவ்வந்தி பூக்கள் குறைந்தளவே சாகுபடி செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்ததாலும், கிணறு, ஆழ்குழாய் கிணறுகளில் போதிய தண்ணீர் இருப்பதாலும் செவ்வந்தி பூக்கள் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தீபாவளி, சபரிமலை சீசன் காலங்களில் செவ்வந்தி பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்ப்பில் காத்திருக்கிறோம்.

The post சாணார்பட்டி பகுதியில் மஞ்சள் செவ்வந்தி விளைச்சல் அமோகம் appeared first on Dinakaran.

Tags : Chanarpatti ,Gopalpatti ,Kallupatti ,Rajakapatti Panchayat ,Dinakaran ,
× RELATED அடிப்படை வசதி செய்துதர கோரிக்கை