×

முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் ரூ.1.55 கோடியில் 2 மண்டபம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் இரு நுழைவாயில்களிலும் ஆண்டுதோறும் தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதிலாக பொதுமக்கள் நலன்கருதி ரூ.1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் 2 மண்டபங்கள் தமிழ்நாடு அரசால் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீர முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் தேவர் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில், 1908 அக்டோபர் 30ம் தேதி பிறந்தார். பள்ளிப் படிப்பினை மட்டுமே முடித்திருந்தாலும், அந்நிய நாட்டினால் அடிமைப்பட்டிருந்த அடித்தள மக்களின் அன்றாட வாழ்க்கையே போராட்டமாக இருந்ததைக் கண்ணுற்ற தேவர், அம்மக்களின் வாழ்வு மேம்பட தன்னையே அர்ப்பணித்தார்.

ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராட, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை தேவரைச் சாரும். 1920ல் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமலில் இருந்த மிகவும் கொடுமையான குற்றப்பரம்பரை என்கிற சட்டத்திற்கு எதிராக முதன் முதலில் போராடி அச்சட்டத்தை அகற்றியவர் தேவர்.

1939 ஜூன் 22, அகில இந்திய பார்வர்டு கட்சியை நிறுவி நேதாஜி சுபாஷ் சந்திர போஸூடன் இணைந்து செயல்படல், 1952ல் நடந்த பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அருப்புக்கோட்டை மக்களவை தொகுதியிலும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி என பல்வேறு உச்சங்களைத் தொட்டவர் தேவர். ‘வங்கத்தில் நேதாஜி, தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’ என கலைஞரால் போற்றப்பட்டவர். இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்ட விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். நினைவிடத்தின் முன் ஒரு சிறிய இடத்தில், குறுகிய நேரத்தில் அதிக கூட்டம் கூடுவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் திறந்த வெளியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. வெயில் மற்றும் மழையில் இருந்து அவர்களைப் பாதுகாத்திடவும், கூட்ட நெரிசலை தடுப்பதற்கும் தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் விழாவின் போது நினைவிடத்தின் முன் தற்காலிக கொட்டகை, பந்தல் மற்றும் தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது.

தேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாத்திட, ஒரு நிரந்தர மண்டபம் அமைத்து தர வலியுறுத்தி அரசுக்கு பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை அளித்து வருகின்றனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் இரு நுழைவாயில்களிலும் ரூ.1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு மண்டபங்கள் தமிழ்நாடு அரசால் அமைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* தேவர் குருபூஜை தொடங்கியது
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 116வது ஜெயந்தி விழா, 61வது குருபூஜை விழா நேற்று காலை துவங்கியது. இதையொட்டி தேவர் நினைவாலயத்தில் அறங்காவலர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் ஆன்மிக விழா, கணபதி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து லட்சார்ச்சனை, மலர் அர்ச்சனை நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜை, இரவில் தேவர் உற்சவ மூர்த்திக்கு 18 வகை அபிஷேகம் செய்யப்பட்டு, ரத ஊர்வலம் நடந்தது. நாளை (அக்.30ம் தேதி) காலை நடக்கின்ற தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

The post முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் ரூ.1.55 கோடியில் 2 மண்டபம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Muthuramalingadevar Memorial ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Mandapam ,Dinakaran ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...