×

வீட்டை விட்டு காதலர்கள் வெளியேறியதால் ஆத்திரம் காதலன் வீட்டை பெட்ரோல் ஊற்றி எரித்த பெண் வீட்டார்: ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு

ஜோலார்பேட்டை: காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு காதலர்கள் வெளியேறினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் வீட்டார் காதலனின் வீட்டிற்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி, போஸ்ட் மேன் வட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் சிவா- பாரதி தம்பதி. இவர்களது மகள் அக்சயா(18). அக்சயாவும் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் விஜய் (25) என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். விஜய் கூலி வேலை செய்து வருகிறார். . இதையறிந்த பெற்றோர்கள் காதலர்கள் இருவரையும் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், அக்சயா கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளார். இந்நிலையில் காதலர்கள் இருவரும் நேற்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை சிவா மற்றும் அண்ணன் அழகேசன் ஆகியோர் காதலன் விஜயின் வீட்டின் ஜன்னலை அடித்து உடைத்து, பெட்ரோலை வீட்டிற்குள் ஊற்றி தீ வைத்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். வீட்டிற்குள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, வீட்டிற்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த அக்சயாவின் தந்தை சிவா (47), அவரது மனைவி பாரதி (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அழகேசன் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

The post வீட்டை விட்டு காதலர்கள் வெளியேறியதால் ஆத்திரம் காதலன் வீட்டை பெட்ரோல் ஊற்றி எரித்த பெண் வீட்டார்: ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Jollarpet ,Jolarpet ,
× RELATED சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி