×

பாஜ மாநில நிர்வாகி குண்டாசில் கைது: கொலை உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்பு

திருவிடைமருதூர்: கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குடந்தையை சேர்ந்த பாஜ மாநில நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சாக்கோட்டை கீழத்தெருவில் வசிப்பவர் மாதவன் மகன் கார்த்தி (எ) கார்த்திகேயன் (41). பாஜ இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (ஓபிசி அணி) மாநில செயலாளரான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் நாச்சியார்கோவில் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் ரவுடி பட்டியலில் கார்த்திகேயன் பெயர் உள்ளது.

இந்நிலையில் வீட்டுக்கு பின்புறமுள்ள இடத்தை, தன் பெயருக்கு இலவசமாக மாற்றிதரும்படி அந்த இடத்தின் உரிமையாளரை கார்த்திகேயன் மிரட்டியது தொடர்பாக வந்த புகாரின் பேரில் கடந்த ஏப்ரல் 27ம் தேதி கார்த்திகேயன் வீட்டுக்கு சென்று நாச்சியார்கோவில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து வெடிபொருட்கள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் அங்கு கார்த்திகேயன் இல்லாமல் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் பழவாத்தான்கட்டளை ஊராட்சி விவேகானந்தர்நகரில் கிரிப்டோ கரன்சி நிதி நிறுவனம் நடத்தி பல லட்சம் மோசடி செய்த அர்ஜுன் கார்த்தியை மிரட்டி ரூ.25 லட்சம் மற்றும் கார் வாங்கி உள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த 15ம்தேதி கார்த்தியேனை போலீசார் கைது செய்து தஞ்சாவூர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கார்த்திகேயனை கைது செய்ய வேண்டுமென நாச்சியார்கோயில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி அளித்த ஆவணங்களின் அடிப்படையில், தஞ்சாவூர் எஸ்.பி ஆசிஷ்ராவத் பரிந்துரையின் பேரில் தஞ்சாவூர் கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவின்படி, பாஜ மாநில நிர்வாகி கார்த்தியேனை குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.

The post பாஜ மாநில நிர்வாகி குண்டாசில் கைது: கொலை உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Kundasil ,Thiruvidaimarudur ,Kudanta ,Gundasil ,Dinakaran ,
× RELATED சேரன்மகாதேவியில் குண்டாசில் வாலிபர் கைது