×

பாஜ பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேர் கைது

வேளச்சேரி: பள்ளிக்கரணையில் பாஜ பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் மதனகோபால் (எ) பல்லு மதன் (46). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், சென்னை கிழக்கு மாவட்ட பாஜ பட்டியல் அணி (எஸ்சி, எஸ்டி பிரிவு) தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 24ம் தேதி மாலை 5.30 மணியளவில் 15க்கும் மேற்பட்டோர் பல்லு மதனை தேடி அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் இல்லாததால், அவரது மனைவியை தாக்கி, கத்திமுனையில், ‘‘உன் கணவனை கொன்றுவிடுவோம்,’’ என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர், வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பினர். ஆனால் பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை என தெரிகிறது, இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிக்கரணை போலீசார், பெட்ரோல் குண்டை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரித்தனர். அதில், கடந்த 22ம் தேதி இரவு மயிலை பாலாஜி நகரில் பெயின்டர் பிரசாந்தை (28) கொலை செய்தவர்களுக்கு, பல்லு மதன் உதவி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த் நண்பர்கள் பல்லு மதனை தீர்த்துக்கட்ட வந்துள்ளனர். அவர் வீட்டில் இல்லாததால் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியது தெரியவந்தது. இந்த வழக்கில், மயிலை பாலாஜி நகர் 3வது பகுதியை சேர்ந்த அபினேஷ் (19), 2வது பகுதியை சேர்ந்த தினேஷ் (28), தீபன் ராஜ் (19) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post பாஜ பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Pallikaran ,Pallikarana Peacock ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...