×

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்; ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: ராணுவ வீரர், 4 பொதுமக்கள் காயம்

ஜம்மு: இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், எல்லையின் வழியாக ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு – காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அமைந்துள்ளது. அந்த எல்லையில் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் அவ்வப்போது ஊடுருவ முயல்வர். அவர்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும். இந்நிலையில் சர்வதேச எல்லையின் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற ஐந்து லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் நேற்றிரவு சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், ‘ஆர்னியா மற்றும் ஆர்.எஸ் புரா செக்டார்களில் அமைந்துள்ள ஐந்து இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். இரவு நேரத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் ஒருவர், நான்கு பொதுமக்கள் காயமடைந்தனர். அதன் தொடர்ச்சியாக குப்வாராவின் மச்சில் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், காவல்துறையும் ராணுவமும் இணைந்து பதிலடி தாக்குதல் நடத்தியது. மேலும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) வழியாக ஊடுருவ முயன்ற ஐந்து லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச் சண்டை நடந்த இடத்தில் இருந்து ஐந்து ஏகே ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

இந்த 5 தீவிரவாதிகளும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றிரவு வரை சர்தாரி நார் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் அடையாளம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் கணிசமாக குறைந்துள்ள நிலையில், இந்திய எல்லைக்குள் மீண்டும் ஊடுருவ முயற்சிகள் தொடர்கிறது. அதனை அவ்வப்போது இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. முன்னதாக கடந்த 4 நாட்களுக்கு முன் உரி செக்டார் எல்லையின் வழியாக ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஊடுருவ முயன்ற 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்’ என்று கூறினர்.

The post இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்; ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: ராணுவ வீரர், 4 பொதுமக்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Pakistan Army ,Jammu ,Dinakaran ,
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...