×

கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தி.மலைக்கு 28, 29ம்தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

வேலூர்: திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியன்று தரிசனம் செய்யவும் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே வரும் 28, 29ம் தேதிகளில் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அதன் விவரம்: வண்டி எண்06033 சென்னை பீச்-வேலூர் கன்டோன்மென்ட் மெமு சிறப்பு ரயிலாக 8 பெட்டிகளுடன் வண்டி எண் 06127 ஆக சென்னை பீச்-வேலூர் கன்டோன்மென்ட்-திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் வேலூர் கன்டோன்மென்டில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது. கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் வண்டி எண் 06128 திருவண்ணாமலையில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.35 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் வந்தடைகிறது.

வழியில் துரிஞ்சாபுரம், அகரம்சிப்பந்தி, போளூர், ஆரணி ரோடு, கண்ணமங்கலம், கணியம்பாடி ரயில் நிலையங்களில் நின்று வரும். பின்னர் இந்த ரயில், வேலூர் கன்டோன்மென்டில் இருந்து சென்னை பீச்சுக்கு வண்டி எண் 06034 ஆக வழக்கம்போல புறப்பட்டு செல்லும். இரு மார்க்கங்களிலும் நேரடியாக திருவண்ணாமலை, சென்னை பீச் நிலையங்களுக்கு டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். வண்டி எண் 06690 மயிலாடுதுறை-விழுப்புரம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில், வண்டி எண் 06129 ஆக விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு வழக்கமான நேரத்துக்கு விழுப்புரம் வந்து, அங்கிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழபட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ரயில் நிலையங்களில் நின்று, திருவண்ணாமலையை காலை 11 மணிக்கு அடைகிறது.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06130 ஆக திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு தண்டரை, அண்டம்பள்ளம், ஆதிச்சனூர், திருக்கோவிலூர், அயந்தூர், மாம்பழபட்டு, வெங்கடேசபுரம் ரயில் நிலையங்களில் நின்று விழுப்புரத்தை மதியம் 2.15 மணிக்கு அடைகிறது. அங்கிருந்து வண்டி எண் 06691 ஆக வழக்கம்போல் புறப்பட்டு மயிலாடுதுறையை அடைகிறது. இந்த வண்டிகளிலும் மயிலாடுதுறையில் இருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து மயிலாடுதுறைக்கும் நேரடியாக டிக்கெட்டை எடுத்துக் கொள்ளலாம். இந்த ரயில் 7 ஜிஎஸ், 2 எஸ்எல்ஆர் பெட்டிகளுடன் இயங்கும். அதேபோல் வண்டி எண் 06027 தாம்பரம்-விழுப்புரம் மெமு எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம்போல் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வந்தடைந்து, அங்கிருந்து 29ம்தேதி வண்டி எண் 06132 ஆக திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது.

அங்கிருந்து வழக்கம்போல் புறப்பட்டு தாம்பரம் சென்றடைகிறது. வழியில் தண்டரை, அண்டம்பள்ளம், ஆதிச்சனூர், திருக்கோவிலூர், அயந்தூர், மாம்பழபட்டு, வெங்கடேசபுரம் ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. வண்டி எண் 06028 ஆக விழுப்புரம்-தாம்பரம் மெமு எக்ஸ்பிரஸ் மேற்கண்ட நாட்களில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால் பயணிகள் திருவண்ணாமலையில் இருந்தே தாம்பரத்துக்கும், தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கும் நேரடியாக டிக்கட் பெற்றுக் கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கிரிவலம் செல்ல உகந்த நேரம்
ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 28ம் தேதி அதிகாலை 4.02 மணிக்கு தொடங்கி, 29ம்தேதி அதிகாலை 2.24 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, வரும் 28ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்த நேரமாகும். ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுக்கிழமைகளில் அமைந்திருக்கிறது. எனவே, இந்த மாதம் பக்தர்களின் வருகை அதிகம் இருக்கும் என்பதால், விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

The post கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தி.மலைக்கு 28, 29ம்தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Krivalam ,T. Malai ,Thiruvannamalai Annamalai temple ,Aippasi ,
× RELATED (தி.மலை) தையல் வகுப்புக்கு சென்ற இளம்பெண் கடத்தலா? போலீஸ் விசாரணை