×

ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆக்கிரமித்த அரசு நிலம் மீட்பு: எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது

திருவள்ளூர், அக். 26: பூந்தமல்லி அடுத்த திருமழிசை பேரூராட்சியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று 60 ஏக்கரில் 850 பிளாட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான நெற்களம், அணாதினம், குட்டை, வண்டி பாதை, தோப்பு என பல வகை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி செயல்அலுவலர் மற்றும் பூந்தமல்லி வட்டாட்சியருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். இவ்வாறு ரியல் எஸ்டேட் நிறுவனம் பேரூராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் வரை நிலம் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதன் மதிப்பு சுமார் ₹10 கோடி எனவும் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த தனியார் மனைப்பிரிவில் இருந்த பனை மரங்களை வெட்டி கீழே சாய்த்து விட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் வட்டாட்சியர் மாலினி ஆகியோருக்கு புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் மாலினி உத்தரவின் பேரில் தலைமை சர்வேயர் துரைராஜ் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், பேரூராட்சி அலுவலர்கள் நேற்று திருமழிசை பேரூராட்சியில் உள்ள தனியார் மனைப்பிரிவில் ஆய்வு மேற்கொண்டு அளவிடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பேரூராட்சி தலைவர் வடிவேல், துணைத்தலைவர் மகாதேவன் மற்றும் கவுன்சிலர்களும் உடனிருந்தனர். தனியார் மனைப்பிரிவின் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த பேரூராட்சிக்கு சொந்தமான நெற்களம், அணாதினம், குட்டை, வண்டி பாதை, தோப்பு என பல வகை நிலங்கள் மீட்கப்பட்டு எல்லைக் கற்கள் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில், இந்த நிலம் பேரூராட்சிக்கு சொந்தமானது என்றும் அத்துமீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வெள்ளவேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆக்கிரமித்த அரசு நிலம் மீட்பு: எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Poontamalli ,Thirumazhisai ,
× RELATED பூந்தமல்லி பகுதியில் பாஜக வேட்பாளரை...