×

ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் காஞ்சிபுரம் கலெக்டர் ஆய்வு

வாலாஜாபாத், அக்.26: ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் ₹162 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு செய்தார். வாலாஜாபாத் ஒன்றியம், ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் அருகே ₹162 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி கட்டப்படுகிறது. இந்த விடுதியை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, ₹1.40 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வரும் நூலக கட்டிடம், ₹1.10 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிடத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிக்கு சென்று, மாணவ – மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். இதனையடுத்து, பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மற்றும் சமையல் செய்முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொ) பாபு, மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

அரசு மானியத்தில் விதை நெல் விநியோகம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து பாதுகாப்பதற்காக, ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 20 கிலோ விதை நெல் மானிய விலையில் வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயத்தை மட்டுமே பிரதானமாக நம்பியிருக்கிறது. இங்கு நெல் பிரதான சாகுபடி பயிராகும். குறிப்பாக, சிஓ 51, பிபிடி 5204, என்எல்ஆர் 34,449, ஜடபில்யுபி உள்ளிட்ட சன்னரக நெல் ரகங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்நிலையில், வழக்கத்தில் இருந்து படிப்படியாக குறைந்து வரும் நாட்டு ரகங்கள் எனப்படும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், வேளாண் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து மீட்டெடுக்கவும், மருத்துவ முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் விதை நெல் வழங்கும் திட்டமானது, கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது.

அந்த வகையில், நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கம் 2023-24ன் கீழ், பாரம்பரிய நெல் ரக விதைகள், வேளாண்மை துறை மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் நெல் பாரம்பரிய ரகங்களான தூயமல்லி, ஆத்தூர் கிச்சலி சம்பா ஆகிய ரகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த ரகங்களின் விற்பனை விலை ஒரு கிலோ ₹50 ஆகும். ஆனால், விவசாயிகளுக்கு, 50 சதவீத அரசு மானியத்தில் ஒரு கிலோ ₹25 விதம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 20 கிலோ வரை அரசு மானியத்தில் விதை நெல் வழங்கப்படுகிறது. எனவே, சம்பா பருவ சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வேளாண் மற்றும் துணை வேளாண் விரிவாக்க மையங்களில் பாரம்பரிய நெல் விதைகளை வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் காஞ்சிபுரம் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kancheepuram ,Eenchambakkam Village ,Walajahabad ,Adi Dravidar ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED வாலாஜாபாத் பேரூராட்சியில் மினி...