×

வல்லநாடு பேருந்து நிறுத்தம் அருகே ஆமை வேகத்தில் சுகாதார வளாகப்பணி

செய்துங்கநல்லூர், அக். 26: வல்லநாடு பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 2 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வரும் சுகாதார வளாகப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வல்லநாடு பேருந்து நிறுத்தத்தில் பொது சுகாதார வளாகம் இல்லாததால் பயணிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வந்தனர். இதுதொடர்பாக இப்பகுதி மக்கள் விடுத்த தொடர் கோரிக்கையை ஏற்று 2 ஆண்டுகளுக்கு முன்பு தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் அப்போதைய கலெக்டர் செந்தில்ராஜ், வல்லநாடு பேருந்து நிறுத்தம் அருகில் சமுதாய சுகாதார வளாகம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் 2 ஆண்டுகள் முடிந்தும் தற்போது வரை ஆமை வேகத்தில்தான் பணிகள் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பணிகள் எதுவும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தண்ணீர் வசதிக்கா போர்வெல் போடுவது, கதவுகள் மாட்டுவது உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே பாக்கி இருப்பதாகவும், இந்த பணிகளை விரைந்து முடித்து சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இந்த சுகாதார வளாகம் திறக்கப்பட்டால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மட்டுமின்றி வல்லநாடு மெயின்ரோடு பகுதியில் உள்ள கடைக்காரர்கள், வாடகை வாகனம் ஓட்டும் தொழிலாளர்கள், வல்லநாட்டை கடந்து செல்லும் வெளியூர் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

The post வல்லநாடு பேருந்து நிறுத்தம் அருகே ஆமை வேகத்தில் சுகாதார வளாகப்பணி appeared first on Dinakaran.

Tags : Vallanadu ,Aami ,Karadanganallur ,Sanitation ,Dinakaran ,
× RELATED சிங்கத்தாகுறிச்சி சுகாதார...