×

அதிமுக குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க அச்சம் எடப்பாடி பிரதமர் ஆவாரா? சிரிப்புதான் இதுக்கு பதில்: அண்ணாமலை கிண்டல்

கோவை: ‘எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆவார் என்ற மாஜி அமைச்சர் பேச்சுக்கு சிரிப்பு தான் பதில்’ என அண்ணாமலை கூறினார். கோவை விமான நிலையத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ‘‘நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும், எடப்பாடி பழனிச்சாமிதான் அடுத்த பிரதமர் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி இருக்கிறாரே’’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து அண்ணாமலை கூறியதாவது:

அதை பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.‌ கருத்து சொன்னால் தவறாக போய்விடும். நீங்கள் கேட்டவுடன் நான் சிரித்தேன். என்னுடைய பெரும் சிரிப்பு தான் என் கருத்து. எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் கனவு இருக்கலாம். ஆனால், மோடி தான் நான்காவது முறையாகவும் பிரதமராக இருக்க போகிறார். இதில் மாற்று கருத்து இல்லை. தமிழர் ஒருவர் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றால், அதற்கு தமிழ்நாட்டில் பாஜ ஆட்சி வர வேண்டும். திராவிடம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பது குறித்து கேட்கிறீர்கள். இன்னோரு கட்சி தலைவர் கூறிய கருத்துக்கு பதில் சொல்ல முடியாது. மற்ற கட்சி பற்றி கமெண்ட் செய்வதை நிறுத்தி கொண்டேன்.

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பிரதமர் மோடி சிலிண்டர் விலை குறைத்தது குறித்து பேசியது தொடர்பாக கேட்கிறீர்கள். நான் ஒரு கட்சியின் மாநில தலைவர். யாருக்கு பதில் சொல்வது என்பது முக்கியம். கேட்கும் நபர்களுக்கு தகுதி இருக்க வேண்டும். அரசியலுக்காக பேசுபவர்களை என்ன சொல்ல முடியும்.சங்கரய்யா முக்கியமான மனிதர். மாற்று சித்தாந்தம் இருந்தாலும், தமிழ்நாட்டின் மூத்த தலைவர். அவருக்கு டாக்டர் பட்டம் தர கவர்னர் மறுக்க வாய்ப்பில்லை. கவர்னர் என்ன கேட்டு இருக்கிறார் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அதிமுக குறித்த நிருபர்கள் கேட்ட கேள்விகளை அண்ணாமலை தவிர்த்து விட்டார். அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க பாஜ ரகசிய பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக மற்றும் அக்கட்சி தலைவர்கள் குறித்து விமர்சிக்க பாஜ தலைமையை தடை விதித்தது உள்ளது. இதன் காரணமாகவே அதிமுக தொடர்பான கேள்விகளுக்கு அண்ணாமலை பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

* கவுதமியுடன் மோதலா?

அண்ணாமலை கூறுகையில், ‘கவுதமியை நேற்று சந்தித்தேன். அவருடன் காபி சாப்பிட்டேன். அவர் எனக்கு நண்பர். பிரச்னை எதுவும் இல்லை. அவர் 25 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறார். கட்சி சார்பில் அவரது மனக்குமுறலை கேட்டேன். அவர் கட்சியில் இருக்கிறாரா? என்பதை விட அவரின் மன நிம்மதி முக்கியம். அவருக்கு உதவி செய்ய முடியும் என்றால் செய்வேன்’ என்றார்.

The post அதிமுக குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க அச்சம் எடப்பாடி பிரதமர் ஆவாரா? சிரிப்புதான் இதுக்கு பதில்: அண்ணாமலை கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Etapadi ,AIADMK ,Annamalai ,Coimbatore ,minister ,Edappadi Palaniswami ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...