×

சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களில் இந்தியா என்ற வார்த்தைக்கு பதில் இனி “பாரத்” என்ற வார்த்தையை மாற்ற என்.சி.இ.ஆர்.டி. குழு பரிந்துரை; கல்வியாளர்கள் கண்டனம்..!!

சென்னை: சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களில் இந்தியா என்ற வார்த்தைக்கு பதில் இனி பாரத் என்ற வார்த்தையை மாற்ற என்.சி.இ.ஆர்.டி. குழு பரிந்துரை செய்துள்ளது. 12ம் வகுப்பு பாட புத்தகத்தில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக “பாரத்” என்ற பெயரை சேர்க்க என்சிஇஆர்டி ஒப்புதல் வழங்கியுள்ளது.  சிபிஎஸ்இ பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்தை மாற்றி அமைப்பது குறித்து என்.சி.இ.ஆர்.டி. குழு ஆய்வு செய்தது. ஆய்வுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்தியாவுக்கு பதில் பாரத் என பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் வரலாறு பாடங்கள் மாறுகின்றன:

பண்டைய வரலாறு என்பதற்கு பதில் செவ்வியல் வரலாறு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், அனைத்து பாடப்புத்தகங்களிலும் “இந்திய பாரம்பரிய அறிவு” என்ற பெயரிலும் புதிய பாடத்தை அறிமுகப்படுத்த என்.சி.இ.ஆர்.டி. குழு பரிந்துரை செய்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு இந்தியா கூட்டணி உருவாக்கிய பிறகு நாட்டின் பெயரை பாரத் என பயன்படுத்த பாஜக தொடங்கியது.

ஏற்கனவே ஜி20 மாநாடு அழைப்பிதழில் இந்தியாவுக்குப் பதில் பாரத் என பயன்படுத்தப்பட்டது சர்ச்சையானது. ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியின் மேஜையில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என பெயர் பலகை வைத்ததற்கும் எதிர்ப்பு எழுந்தது. நாட்டின் பெயரை மாற்ற மோடி அரசு திட்டமிடுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பாடநூல்களில் பாரத் என மாற்ற பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

பள்ளி பாடநூல்களில் பாரத்?: கல்வியாளர்கள் கண்டனம்

சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களில் இந்தியாவுக்கு பதில் பாரத் என மாற்றும் பரிந்துரைக்கு கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட தரவுகளை வைத்துக் கொண்டு மட்டுமே வரலாற்றை எழுத முடியாது என பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார். வரலாற்றை மறைத்துவிட்டு பழங்கால இந்தியாவில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை கட்டமைக்க முயற்சிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

வரலாறு பற்றிய மோசமான பார்வையை எல்லோரிடமும் பார்க்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றம்சாட்டியுள்ளது. மோசடியாக அரசியல் சாசன உணர்வை மதிக்காமல் தங்களின் எண்ணத்தை மாணவர்களின் சிந்தனை மீது திணிக்கிறார்கள். வேதங்களின் சிந்தனையை பல மதங்கள் கொண்ட இந்தியாவில் பாடப்புத்தகங்கள் மூலம் திணிக்கப் பார்க்கிறார்கள். புராண கட்டுக்கதைகளை வரலாறு என பள்ளிக் குழந்தைகளின் சிந்தனையில் பாஜக திணிக்கப் பார்க்கிறது என்றும் மார்க்சிஸ்ட் கடுமையாக சாடியுள்ளது.

The post சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களில் இந்தியா என்ற வார்த்தைக்கு பதில் இனி “பாரத்” என்ற வார்த்தையை மாற்ற என்.சி.இ.ஆர்.டி. குழு பரிந்துரை; கல்வியாளர்கள் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : India ,CBSE ,N. C. E. R. D. ,Chennai ,Bharat. C. E. R. D. Group ,Bharat ,N. C. E. R. D. Team ,Dinakaran ,
× RELATED செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் புத்தகம் இல்லா நாள் விழா