×

ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை: மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்ததில் கீழேவிழுந்த 30 பவுன் தப்பியது


கோபி: கோபி அருகே உள்ள மொடச்சூரில் ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையர்கள் தப்பியோடியபோது, கீழே விழுந்த 30 சவரன் நகையை எடுக்காமல் சுவர் ஏறி குதித்து தப்பியது விசாரணையில் தெரியவந்தது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள மொடச்சூர் வேலப்பன் தெருவை சேர்ந்தவர் அர்ச்சுனன்(59). இவர், கோபி அருகே கரட்டடிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இவரது மகள் தீபிகா(25), பல் டாக்டராக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

தீபிகாவிற்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக 100 பவுன் நகையை அர்ச்சுனன் வாங்கி வீட்டில் உள்ள பீரோவில் வைத்து இருந்தார். மகள் திருமணம் என்பதால் கடந்த ஒரு மாத காலமாக வீட்டில் பெயிண்டிங் மற்றும் மராமத்து பணிகளை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று மாலை தீபிகா வழக்கம்போல் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று விட்டார். அர்ச்சுனனும் அவரது மனைவி சபிதாவும் அந்தியூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு மாலை 5 மணிக்கு சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்பி உள்ளனர். வீட்டின் முன்பக்க கதவை திறந்து அர்ச்சுனன் உள்ளே சென்றபோது, வீட்டின் சமையலறை பகுதியில் இருந்த கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதைத்தொடர்ந்து வீட்டின் கீழ் பகுதியிலும், மாடியிலும் இருந்த அறைகளுக்கு சென்று பார்த்தபோது, இரண்டு அறைகளிலும் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அர்ச்சுனன், இதுகுறித்து கோபி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து அங்கு வந்த கோபி இன்ஸ்பெக்டர் சண்முகவேலு தலைமையிலான போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் வீட்டின் பின்பகுதியில் கொள்ளையர் தப்பிச்சென்ற பகுதிகளை சோதனை செய்தனர். அப்போது வீட்டின் பின்பகுதியில் சில நகை பெட்டிகளும், ஒரு பேக்கும் கிடந்தது. போலீசார், அந்த பேக்கை எடுத்து பார்த்தபோது அதில் சுமார் 30 பவுன் நகை இருப்பது தெரிய வந்தது.

கொள்ளையர் சுவர்ஏறி குதித்து தப்பி சென்றபோது, கீழே விழுந்த நகையை எடுக்காமல் விட்டுச்சென்று இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து நகையை கைப்பற்றிய போலீசார், கொள்ளையர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாலை 5 மணியில் இருந்து 8 மணிக்குள் 3 மணி நேரத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் யாரும் இல்லை என்பது தெரிந்தே கொள்ளை சம்பவம் நடந்து இருப்பதால் தெரிந்த நபர்களே கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை: மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்ததில் கீழேவிழுந்த 30 பவுன் தப்பியது appeared first on Dinakaran.

Tags : Gobi ,Modachur ,
× RELATED பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு